தமிழர் ஒற்றுமையைத் தகர்ப்பதா திராவிடம்? - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்,

தமிழர் ஒரு தனித் தேசிய இனம் என்னும் ஓர்மையை (மெய்ம்மையை) ஒழிப்பதற்கென்றே திராவிட ஓர்மை என்னும் பொய்மைத் தமிழரின் தலைமேல் பெரியாரால் சுமத்தப்பட்டது. என்பது குணாவின் அடுத்த குற்றச்சாட்டு.
இதற்கு நாம் பதிலோ விளக்கமோ சொல்லத் தேவையில்லாமல் இக்குற்றச்சாட்டிற்குக் கூறப்படுவதற்கு முன்பே பெரியாரே 1948இல் பதில் சொல்லியுள்ளார்.
தமிழர் என்பது மொழிப்பெயர், திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ்ப் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்னும் தலைப்பில்கூற முடியும். ஆனால், தமிழ்ப்பேசும் அத்தனை பேரும் திராவிடர் (தமிழ் இனம்) ஆகிவிட முடியாது. என்கிறார்.
இந்த நுட்பத்தை, இனப்போருக்கான அடித்தளத்தை, இன மீட்சிக்கான யுக்தியை உணர்ந்துகொள்ளும் நுட்பமும், கூர்மையும் இல்லாதவர்கள் சித்தாந்த ரீதியாக இப்பிரச்சினையை அணுகுவதாலே இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
நான் முன்னமே சொன்னதுபோல் தெற்காசியா முழுமைக்கும் உரிமையுடையவர்கள் தமிழர்கள். அந்தத் தமிழர்களுடன் அயலவர் கலந்தபோது அவர்கள் மொழியும் தமிழுடன் கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்றவையாக தமிழ் மாறி, மொழியால் தமிழர்கள் பிரிந்து கன்னடர், தெலுங்கர், மலையாளி என ஆயினும் அவர்கள் யார்? தமிழ் இனமக்கள் அல்லவா? ஆக, தமிழ் இன மக்கள் மொழியால் பிரிந்தாலும் இனத்தால் தமிழ் இனம் என்பதால் அவர்களை இரத்த உறவோடு சேர்த்துக்கொண்டதுதான் மெய்ம்மைக் கோட்பாடாகும். மாறாக, தமிழ் பேசுகின்றவர்கள் என்கின்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில், தமிழர்களை மொழி அடிப்படையில் அணிசேர்க்கும்போது தமிழர் அல்லாதாரும், ஆரியர்களும் அக்கோர்வையில் வருகின்றனர். எனவே, மொழி அடிப்படையில் தமிழ் மண்ணில் செய்யப்படும் பாகுபாடு உண்மைக்கும், உறவுக்கும் மாறான பொய்மைக் கோட்பாடாகும்.
மேலை நாடுகளின் மக்கள் பகுப்பு மொழி அடிப்படையில் நிகழ்த்தப்பட்டபோது, அங்கு மொழியே இனத்திற்கு அடிப்படை ஆயிற்று. இங்கு ஓர் இனம் பல மொழியைப் பேசும் நிலை இருப்பதால் மொழி அடிப்படையில் இனப்பகுப்பு இயலாமல் போனது. இந்த இயல்பறிந்தே தந்தை பெரியார் திராவிடம் என்ற சொல் மூலம், இன அடிப்படையில் அணி சேர்த்தார்.
பெரியார் ஒரு பெரும் சிந்தனையாளர் என்பது மட்டுமல்ல, பெரியாரின் சிந்தனையை, இலக்கை, கொள்கையை, செயல்பாட்டை, திட்டத்தைப் புரிந்துகொள்ளவே பெரும் சிந்தனை வேண்டும். அத்தகுதி குணா அவர்களுக்கு இல்லை என்பதை, அவர்களின் புரிந்துகொள்ளும் தன்மையும், திறனாய்ந்து கருத்து கூறும் பாங்கும் காட்டுகின்றன.
மொழி வழித்தேசிய இனங்கள் என்ற இக்கால மெய்ம்மைகளைப் புறக்கணித்துவிட்டு, மொழியின் (தமிழ்) வழியில் மக்கள் பிரிவுகளை விளக்குவது அறிவியலுக்கும் நடப்புக்கும் பொருந்தாது.
கொடியும் கொற்றமுமாய் மண்ணாண்ட பண்டைத்தமிழ்ப் பேரரசுகள், வீழவும், தமிழ் தாழவும், தமிழரினம் அடிமைப்படவும் பெருங்காரணமாய் இருந்த திராவிடர்களின் நலன்களையே முன்வைத்து உருவாக்கப் பெற்ற திராவிட மெய்யினக் கொள்கையை ஒரு பொய்மான் என்று ஓர்ந்துணர்ந்து, தமிழறிஞர்கள் போர்க்கோலம் பூண்டாலன்றித் தமிழினத்திற்கு வாழ்வில்லை; வழியில்லை; வருங்காலமும் இல்லை... என்கிறார் குணா.
மேற்கண்ட குணாவின் கூற்றைக் கூர்ந்து நோக்கின் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உளறல்கள் என்பது நன்கு விளங்கும்.
பரந்துபட்ட மண்ணைத் தமிழ் மன்னர்கள் ஆண்டனர் என்பது உண்மை. அவர்கள் வீழ்ந்தது திராவிடத்தாலா? அப்போது ஏது திராவிடச் சித்தாந்தம்.
அப்போது தமிழனுக்குள்ளே ஒற்றுமை இல்லையே? அன்றைக்கு மலையாளமே உருவாகவே இல்லையே. தூயத் தமிழ் பேசிய சேரன் ஆண்ட பகுதியல்லவா கேரளமான சேரநாடு. அது மலையாளமாய், கேரளமாய் மாறியது ஆரியர் கலப்பால் ஆதிக்கத்தால், சமற்கிருத கலப்பால் ஆதிக்கத்தால் அல்லவா? உண்மை இப்படியிருக்க, திராவிடத்தால் தமிழரசுகள் வீழ்ந்தன என்பது தொடர்பற்ற உண்மையற்ற உளறல் அல்லவா?
தெற்காசியப் பகுதிக்கு ஒட்டுமொத்த உரிமையுடைய தமிழினம் சிதைந்ததற்கும், தாழ்ந்ததற்கும், வீழ்ந்ததற்கும் ஆரியர் வருகையும் சமஸ்கிருத கலப்பும் அல்லவா காரணம்? இதை மொழியியலும், மாந்தவியலும் அய்யத்திற்கு இடமின்றி ஆதாரத்தோடு உறுதி செய்கின்றனவே. ஆரியருக்கு அடுத்து அரேபியர், மங்கோலியர், பாரசீகர் என்று பலரும் ஊடுருவியதன் விளைவல்லவா தமிழினம் கலந்து, சிதைந்து போகவும், தமிழில் பிற மொழி கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மாறவும் காரணம்.
இளங்கோ காலத்தில் மலையாளம் இல்லையே! அது சுத்த தமிழ் பேசிய சேர நாடல்லவா? சமஸ்கிருத கலப்பும், ஆரிய ஆதிக்கமும்தானே மலையாளம் உருவாகக் காரணம்? திராவிடமா காரணம்? திராவிடம் என்பது அப்போது இல்லையே! உண்மை இப்படியிருக்க எல்லாம் திராவிடத்தால் கெட்டதாகவும், அதை எதிர்த்தால் மட்டுமே வாழ்வு என்ற ஒரு தவறான வழியைத் தீர்வை குணா காட்டுவது குருடன் வழி காட்டும் கேட்டையே உருவாக்கும்.
இன்றைய உலகமயமாக்கல் நிலையில் எல்லாமே மாறி, இளைஞர் சிந்தனைகள் இனம், மதம், நாடு என்ற எல்லைகள் கடந்து எல்லாம் கலந்து வரும் சூழலில் நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வுகளைக் கூறி, ஆற்றலையும், பொழுதையும் குணா போன்ற குறுக்குசால் பேர்வழிகள் வீணடித்துக் கொண்டுள்ளனர்.
தந்தை பெரியார் பிறப்பால் கன்னடராயிருந்தாலும், அவர் தமிழராகவே வாழ்ந்தார். இந்த உண்மையைத் திரித்தோ, மறைத்தோ எவர் கூறினாலும் அவர் கடுமையான கண்டனத்திற்கு உரியவர்கள்; கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். சுருங்கச் சொன்னால் அவர்கள் ஆரியத்திற்குக் கைக்கூலிகளாகத்தான் கட்டாயம் இருப்பார்கள். இந்தக் கணிப்பு உணர்ச்சிவசப்பட்டு உரைப்பதன்று. இது அப்பட்டமான, அப்பழுக்கற்ற உண்மை!
பெரியார் காலச் சூழலுக்கும், இந்தியாவில் நிகழ்ந்த அரசியல், சமூக மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னுடைய அணுகுமுறைகளை மாற்றி வழி நடத்தினார். அதில் ஏற்படுவது மாறுபாடுகள், வேறுபாடுகள், முரண்பாடுகள் அல்ல. அவை பரிணாம வளர்ச்சிப் போக்குகள். அந்த அடிப்படையில்தான் அவர் சூழலுக்கேற்ப முதலில் திராவிட நாடு கோரிக்கையை எடுத்தார். அதன்பின், தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்.
மொழியடிப்படையில் மாநிலப் பிரிவுகள் என்றவுடன், சென்னை இராஜ்யம் என்பதை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றவும் செய்யவேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்தவர் பெரியார் என்பதை குணா மறைத்துக் குற்றஞ் சாட்டுவது மோசடியல்லவா? பெரியார் அப்போது கூறியவற்றைப் பாருங்கள்.
திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டைவிட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் (எதிர்ப்பிற்கும்) இடமில்லாத தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்கமாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.
இதைத் திருத்த, தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டெல்லி, சட்டசபை, கீழ் மேல் சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்துடன் இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்... என்று 1955ஆம் ஆண்டே உரிமைக் குரலை உணர்வு பொங்க எழுப்பிய உன்னத தலைவர் பெரியார்.
- விடுதலை அறிக்கை, 11.10.1955
இதைவிட தமிழ் உணர்வுடன், தமிழர் பற்றுடன் வேறு என்ன கூறமுடியும். மேற்கண்ட பெரியாரின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் அவர் எவ்வளவு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் இந்தக் கருத்தை, இக்கோரிக்கையை வைத்துள்ளார் என்பது எவருக்கும் விளங்கும்.
மொழிவழி மாநிலம் வந்தபின் இனி இந்தியாவில் பிரிவினை கோரிக்கை நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்.
உண்மை இப்படியிருக்க அவர் தமிழர் தேசிய மெய்ம்மையை மறைக்க திராவிடப் பொய்மையைத் திணித்தார் என்பது உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும்.
அவர், தமிழர் நாடு என்ற தமிழ்த் தேசிய உணர்வை மறைக்க விரும்பியிருந்தால், தமிழ்நாடு என்று பெயர் வேண்டி அவ்வளவு உருக்கமாக வேண்டுகோள் வைப்பாரா? தமிழ்நாடு தமிழனுக்கே என்ற முழக்கத்தை முதன்முதலில் வைத்திருப்பாரா?
தந்தை பெரியார் ஊட்டிய விழிப்பும், உணர்வும் பரவியதன் விளைவே இன்று தமிழ்த் தேசியம் பேசும் எழுச்சி எழுந்ததற்குக் காரணம்.
குணா போன்ற குறுக்குசால் பேர்வழிகள் நான்கு சுவற்றுக்குள் நாற்காலியில் அமர்ந்து ஆலோசனை சொல்வதற்கு மாறாய், பெரியார் ஊட்டிய விழிப்பையும், உணர்வையும் களமாக அமைத்து தமிழ்த் தேசியத்தை உருவாக்கச் செயல்படட்டும். அதற்கு ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாத வாய்ச்சொல் வீரர்கள் 80 ஆண்டுகளுக்கு முன் பெரியார் கூறிய திராவிட நாடு கோரிக்கையால்தான் தமிழன் வீழ்ந்தான் என்று குற்றஞ் சாட்டிக் கொண்டிருப்பது உள்நோக்கம் உடையதாகும்  நரித் தந்திரமாகும்; ஆரியத்திற்கு ஆதரவான செயல்பாடாகும்.
திராவிடம் என்பதைத் தமிழர்க்கு எதிராகத் திட்டமிட்டுக் கன்னடரான பெரியார் திணித்தார். காரணம், அவர் தமிழர் தனித் தன்மையுடன் மேல்வருவதை விரும்பவில்லை என்று கூறும் குற்றச்சாட்டு முழுவதும் மோசடியானது. உண்மைக்கும், நேர்மைக்கும் எதிரானது. காரணம், திராவிடம் என்ற சொல் நான் முன்னமே ஆதாரங்களுடன் காட்டியதுபோல, அது பெரியார் நீதிக் கட்சிக்கு வருவதற்கு முன்பே பயன்படுத்தப்பட்டது. அதன்பின் அனைவராலும் ஏற்கப்பட்டது.
கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கியது தென்னிந்தியா. இவைகள் சேர்ந்தே இன்றைய சென்னை மாகாணம். இந்தத் தென்னிந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர். இந்த நான்கு சகோதரர்களும் பேசும் மொழிகள் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை. இந்தத் தென்னிந்தியா இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களுக்குள்ளும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும். எங்கள் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் அதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. அதற்காகவே பாடுபடப் போகிறது. (ஜஸ்டிஸ் 09.11.1917) என்று டி.எம். நாயர் குறிப்பிடுகிறார்.
திராவிடம் என்பது அதனுடைய மரபின் பொருளில் மிகத் தொடக்கக் காலத்தில் தமிழ்மொழி பேசுபவர்களுடன் மட்டும்தான் அடையாளப்படுத்தப்பட்டது. ஏனெனில் நவீன இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளில் மிகத் தொன்மையானது தமிழ்தான் என்று கருதப்பட்டது. திராவிடர் என்ற தகுதிக்கு உரிமை பாராட்டிக் கொள்வதில் தெலுங்கர்களுக்கு அத்தகைய ஆர்வம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் தமிழைப் போலன்றி தெலுங்கு மொழி ஏராளமான சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டிருந்தது. அக்காரணத்தால் தெலுங்கு பண்பாடு என்பது ஆரியச் செல்வாக்கு எனக் கூறப்படும் ஒன்றிற்குக் கட்டுப்படாத சுயேச்சையான பண்பாடு என்று உரிமை பாராட்டிக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்தது. மற்றொரு காரணம் என்னவென்றால், வேளாளர்களுக்கும், தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும் இடையே இருந்த போட்டியுணர்வு, பகையுணர்வு தெலுங்குப் பகுதியில் இல்லை.
இக்காரணங்களால்தான் தென்னிந்தியாவில் முதன்மையான திராவிட மொழிக் குழுக்கள் அனைத்தையும் சேர்ந்த பார்ப்பனர் அல்லாதாரில், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு தமிழர்களிடம் மட்டுமே முழுமையாய் இருந்தது... என்கிறார் இர்ஷிக் (Irschik   - 275-276).
அயோத்திதாசர்  தமிழ், திராவிடம் இரண்டும் ஒன்றே என்கிறார்.
திராவிடம், திராவிடர், திராவிட நாகரிகம் என்பன தமிழர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட மொழி, பண்பாட்டு, சமூக மரபின, அரசியல் குறிப்புச் சொற்களே என்பதும், இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலகட்டத்தில் முகிழ்த்த தமிழ்த் தேசிய அரசியலுக்கான குறிப்புச் சொல்லாக அமைந்தன என்பதும் அத்தமிழ்த் தேசிய அரசியலுமே ஏறத்தாழ 50 ஆண்டு காலப் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களின் அளவு ரீதியான வளர்ச்சி பண்பு ரீதியான பாய்ச்சலாக மாறியதன் வெளிப்பாடே என்பதும், தமிழர்களின் சுய அடையாளத்தையோ, தேசிய உணர்வையோ நசுக்குவதற்காக, நீதிக்கட்சியிலிருந்த தெலுங்கர்களாலோ அல்லது சுயமரியாதை இயக்கத்திலிருந்த கன்னடர்களாலோ உருவாக்கப்பட்டவையல்ல என்பதும் தெளிவு.
நீதிக்கட்சியிலிருந்த தமிழர்களைப் போலவே பெரியாரும், திராவிடம் என்ற குறிப்புச் சொல்லை முதன்மையாகத் தமிழர்களையும், தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றையும் மட்டுமே குறிக்கப் பயன்படுத்தினர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முகிழ்த்தத் தமிழ்த் தேசியத்தைக் குறிக்கவும் பெரியார் பயன்படுத்தினார். பின்னர், அன்றைய அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, திராவிடம் என்பதைத் தமிழ்ப்பகுதி உள்ளிட்ட முழு சென்னை மாநிலத்தையும் குறிக்கப் பயன்படுத்தினார். அதற்காக, தம் காலத்தில் நிலவிய மொழியியல், மரபின வரலாறுகளைப் பயன்படுத்திக் கொண்டார்... என்று மிகச் சரியாகக் கூர்மையாகக் கணித்துக் கருத்து தெரிவிக்கிறார் திரு. எஸ்.வி. இராஜதுரை அவர்கள்.
 - (பெரியார் சுயமரியாதை சமதர்மம், பக்கம் 713-714).
அது மட்டுமல்ல, குணா போன்ற குறுக்குசால் பேர்வழிகள் குற்றம் சுமத்தி, குறுக்குசால் ஓட்டுவதற்கு மாறாக, உருப்படியான காரியங்களைச் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
குற்றச்சாட்டுகளைத் தொடுத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒரு தனி நாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு ஏன் தமிழ் அல்லது தெலுங்கு முதலாளிகளிடமிருந்து வரவில்லை? பார்ப்பனிய ஒழிப்பு இல்லாத தமிழ்த் தேசியம் யாருக்குப் பயன்படும்? மக்கள் ஆதரவு என்பதை முன்நிபந்தனையாகக் கொண்டுதான் தனிநாடு அல்லது தன்னுரிமைக் கோரிக்கையை ஓர் இயக்கம் எழுப்ப வேண்டுமா? உலக சோசலிச (பொது உடைமை) இயக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டபின், உலகெங்கும் தோன்றியுள்ள தேசியங்கள் அந்தந்த மக்களின் நலன்களை முன்னுக்கு எடுத்துச் சென்றுள்ளனவா? இந்தியாவில் பல பத்தாண்டுகளாய் நடைபெற்று வரும் தேசிய இனப் போராட்டங்கள் வெற்றி பெறாமைக்குக் காரணங்கள் என்ன? உலக முதலாளியம் ஒன்றுபட்டுச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் ஒடுக்கப்பட்ட தேசங்களும் மக்கள் வர்க்கங்களும் ஜாதிகளும் ஒன்றுபட்டுப் போராட ஒரு வழிமுறையைக் கண்டறிவது இன்றிமையாததல்லவா? இப்படிப்பட்ட வகையில் சிந்தித்துத் தீர்வு காண்பதே தமிழ்த் தேசியம் உருவாக துணை நிற்கும் என்கிறார் திரு. எஸ்.வி.இராஜதுரை அவர்கள்.

இவர் ஆய்வாளர், உண்மையில் தமிழர்மீது பற்றுடன் எழுதுகிறார். உண்மையான திசையை நோக்கி வழிநடத்துகிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு குணாவின் குற்றச்சாட்டுகளைப் பாருங்கள், நான் சொன்னதுபோல அவர் ஓர் ஆரியக் கைக்கூலி, பெரியாரை, திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி ஆரியத்திடம் சபாஷ் வாங்கவே இந்நூலை எழுதியுள்ளார் என்பது எளிதில் விளங்கும்.

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!