அண்ணா கண்ட தியாகராயர்!, - part - 2
பார்ப்பன அன்பர்களுக்கு...
பார்ப்பனர்கள், ஆதிக்கத்தோடு இருந்த காலத்தில் நம்முடைய சிறுவர்கள் பல இடுக்கண்களிடையே படிப்புப்பெற முடியாமலிருந்தது. அதைப் பயன்படுத்தி, அவர்கள்தான் அதிகமாகப் படித்து வந்தார்கள்! பிராமண நண்பர்கள் நம்மைப்பார்த்து உங்கள் மாணவர்களே இனி படிக்கட்டும். நாங்கள் வேறு வேலையிலே ஈடுபடுகிறோம் என்று சொல்லுவார்களா?
பிராமண நண்பனே...
நீ இப்படிச் சொல்லிப்பார், பார்க்கலாம்! இப்படிச் சொல்லுவாயா? சொல்லமாட்டாயே! பல ஆண்டுகளாக நாங்கள் படித்தது போதும். வேத ஆகமங்களைக் கற்கப்போகிறோம். வருங்காலத்திலே அதற்கு நல்ல மதிப்பை நாங்கள் உண்டாக்கப் போகிறோம் என்று வேத ஆகமம் படிப்பதிலே நாட்டம் செலுத்துவதுதானே! இனி வேத ஆகமத்துக்கு நாட்டிலே மதிப்பு ஏற்படுமோ ஏற்படாதோ என்ற பயமா உனக்கு? கல்லூரிகளிலே உனக்குத் தக்க இடமில்லாததற்காக சி. ஆருக்கு (சி. இராசகோபால ஆச்சாரியார் என்ற ராஜாஜி) தூது அனுப்புகிறாய், சர்.அல்லாடி கிருட்ணசாமியைத் தேடி அலைகிறாய். ஜவஹர்லால் நேருவுக்குத் தந்தி கொடுக்கலாமா என்கிறாய்! பதற்றத்துடன் வல்லபாய் படேலை நாடுகிறாய்.
இப்படியெல்லாம் நீ தூதுபோய் என்ன சாதித்துவிட முடியும்? மேலிடத்துக்குத் தூது சென்றுதான் பாரேன்! வேண்டுமானால் இந்து பத்திரிகையிலே கல்வியும் பதவிகளும் (நுனரஉயவடி யனே நுஅயீடடிலஅநவே) என்று தலையங்கம் எழுதச் சொல்.
எங்களிடம் வந்து பழையபடி கலப்பையும், ஏரையும் எடுத்துக்கொண்டு கிராமப் புனருத்தாரன வேலையிலே ஈடுபடுங்கள் என்று சொன்னாலும் சொல்; கிளர்ச்சி செய்தால் எதையும் நியாயப்படி-முறைப்படி கேள். அதற்கு நாங்கள் பதில் சொல்லுகிறோம்.
எங்களுக்குப் பின்...
இன்று இருப்பதிலே நாங்கள்தான் மிதவாதிகள்(ஆடினநசயவந). இது தெரியுமா உனக்கு? எங்களுக்குப் பின் இருப்பது புயல்! அந்தப் புயலை நாங்கள் அடக்கி நேர்வழியில் செலுத்துகிறோம். எங்களைப் புறக்கணித்தால் எங்களுக்குப் பின்னால் வருவது பெரும் புயலாகத்தான் இருக்கும். ஆகவே, பார்ப்பன அன்பர்கள் இந்தப் பழைய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும்.
இங்கு பக்தி! அங்கு அணுசக்தி!!
இந்த நாளிலே அணுசக்தியும் அதற்கு மேற்பட்ட புதிய சக்திகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியிலீடுபட்ட கழிவுப் பொருள்களை எங்கே போட்டு வைப்பது என்று பார்த்துச் சந்திர மண்டலம் அதற்கு ஏற்றதா என ஆராய்ந்து வருகிறார்கள் மேனாட்டாய்வாளர்கள். அவர்கள் சந்திர மண்டலத்தைத் தங்கள் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், இங்கேயோ சந்திரன் ஆரணங்குகளுடன் லீலை பல புரிகிறான் என்ற கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. புதிய செய்திகள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு பக்தியாக்கப்பட்டு வருகின்றன. இந்த நாளிலே பத்திரிகையிலே விநோதமான செய்திகள் வருகின்றன.
துஷ்டர்களால் சுட்டெரிக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் கர்ப்பக் கிரகத்தில் புரோகிதர் சென்று நாசமடைந்து அலங்கோலமாகக் கிடந்தவற்றை எடுக்கையில், 12 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று உடைந்து போன விக்கிரகத்தின்கீழ் படுத்துக்கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்கள் அப் பாம்பைத் தாக்க கற்களை எடுத்தனர். ஆனால், திருவாங்கூர் தேவஸ்தான போர்டின் தலைவர் பி.ஜி.என்.உன்னித்தன், மெல்ல அந்தப் பாம்பினிடம் சென்று அதன் படத்தைத் தட்டிக் கொடுத்து அய்யப்பா, தயவு செய்து போ என்று உரத்த குரலில் சொன்னார். அந்தப் பாம்பும் அவர் காட்டிய திசையில் மெல்ல நகர்ந்து சென்றது. இதுபோன்ற செய்திகள் பிரமாதமான தலைப்புகளுடன் பிரசுரிக்கப்படுகின்றன. கட்டம் கட்டியும்-பெரிய எழுத்தில் அச்சுகோத்தும் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றன. இந்தச் செய்தி தவறானது என்று அதற்குப்பின் செய்தி வருகிறது. ஆனால், இந்த மறுப்பு மட்டும் மூன்று காலத்தில் (மூன்று பத்தி நீளத்தில்) போடப்படுவதில்லை. எங்கோ மூலையில் இடுவார்கள்.
பத்திரிகையிலே இன்னொரு செய்தி வருகிறது. கோடம்பாக்கத்திலே ஒரு சாமியாரைப்பற்றி. சாமியார் சமாதியில் இறங்கப் போனாராம். சாமியார், தான் குறிப்பிட்ட தினத்தன்று இந்த இகலோகத்தைத் துறந்து பரலோகம் போய்விடவில்லை! சாமியார் சாகப்போவதைக் காண மக்கள் கூடியிருந்தனராம் ஆனால், அவர் குறிப்பிட்ட நள்ளிரவு கடந்து வெகுநேரமாகியும் தேக விநியோகம் ஆகவில்லை! சீறியிருக்கின்றனர் மக்கள். தெகிடுதத்தக்காரா, சோதியில் அய்க்கியமாகப்போவதாகச் சொன்னாயே - ஏன் இன்னும் சமாதி அடையவில்லை? என்று சாமியாரை நோக்கிப் பாய்ந்திருக்கின்றனர். சாமியாரோ, ஆத்மாவை அய்யன் பால் வைத்து அசையாது மோன நிலையிலிருப்பேன் என்று சொன்னேனே யொழிய, செத்துவிடப்போவதாகச் சொல்லவில்லையே என்று ஏதேதோ ஏமாற்றுவித்தைகளைக் கொட்டியிருக்கிறார். வேடதாரிகளின் மோசப் பேச்சில் மயங்கிய மக்களோ, கொதித்து எழுந்திருக்கின்றனர் அக்கோவணாண்டியை நோக்கி. மக்களுக்கும்-சாமியாருக்குமிடையே காவலர் (போலீசார்) வந்ததால் நிலைமை கட்டுக்கடங்கியிருக்கிறது.
கோடம்பாக்கத்திலே ஒரு சாமியார் சமாதியிலிறங்கப் போன செய்தியையும், அய்யப்பன் கோயிலிலே பாம்பு வந்துபோன செய்தியையும் மக்கள் பகுத்தறிவு பெற்று வரும் இந்த நாளிலே - மக்களின் அறிவுத் தூதுவனாக இருக்கவேண்டிய பத்திரிகைகள் வெளியிடுவது நல்லதல்ல.
இத்தகைய சூழ்நிலையை வளமாக்கிப் பாதையைச் செப்பனிடும் பொறுப்பு பத்திரிகையாளர்களுடையது. மதத்தை ஒழித்து, மூட பழக்கங்களை முறியடித்து, மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவே நாம் இன்று பாடுபடுகிறோம்.
நம் திட்டம்-அவர்கள் நிறைவேற்றுவார்கள்!
சட்டசபையில் இனி அமரப்போகும் மந்திரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மவர்களாகவே இருப்பார்கள். நமக்கு வேண்டியது பதவி அல்ல! பதவியிலிருப்போர் நம்மவர்களாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள். நாம் நெடுநாளாகக் கூறிவரும் திட்டங்களை நாம் போய்த்தான் நிறைவேற்ற வேண்டும் என்று இல்லை. எதிர்பாராதபடி பிறர் நிறைவேற்றியே வருகிறார்கள். இனியும் இதுபோல் பல சட்டங்களை நிறைவேற்றுவது உறுதி. திராவிடப் பெருங்குடி மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள எழுச்சி வருங்காலத்திலே பெரும்பயன் அளிக்கும். அரசியல், பொருளாதாரம்-இவற்றிலே நாம் இனி நல்ல உயர்வை எதிர்பார்க்க முடியும்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து, மந்திரி மாதவமேனனே (கேரள அமைச்சராய் இருந்தவர்) வானொலியில் (அகில இந்திய ரேடியோவிலே) பேசக்கூடிய நிலை வந்திருக்கிறது! கதராடையும், காந்திகுல்லாயும் தரித்திருக்கும் காங்கிரஸ்காரர்களிலே பலபேர் இன்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்துப் பேசுகிறார்கள். சட்டசபையிலே இனி எந்தக் கட்சி வந்தாலும் அந்தக் கட்சி நம் கழக வேலைகளைச் செய்யும்.
ஒருவனுக்கு ஒரு மனைவிக்குமேல் கூடாது என்று, 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லடிபடப் பேசினோம். இப்பொழுது என்ன ஆயிற்று? சட்டமே வந்துவிட்டதே! முருகர் கடவுளாக இருக்கிற காரணத்தால் அவருக்கு விதிவிலக்கு ஏற்பட்டிருக்கிறது. முருகக்கடவுள் மனிதராக இருந்தால் இன்று சர்க்காரால் (ஆட்சியாளரால்) தண்டிக்கப்பட்டுச் சிறையிலே தள்ளப்பட்டிருப்பார்.
அன்று வீதியோரங்களிலே நின்றுகொண்டு கலப்புமணம் வேண்டுமென்று பேசினோம். இன்று நாட்டிலே பல இடங்களிலே கலப்புமணம் நடைபெறுவதைக் காண்கிறீர்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று பேசினோம். இன்று டில்லிவரை இதற்காகப் போராடுகிறார்கள். நம்முடைய மன எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. மதுரையிலே சைவமதத்தை எதிர்த்தனர் என்ற காரணத்திற்காக, 8000 சமணர்களை மதவெறியர்கள் கழுவேற்றினார்கள். இதனால் சமணர்கள் அழிந்துவிட்டார்களா என்ன?
வென்றது, வெல்வது அறிவு: அடக்கு முறையன்று!
சர்க்கார் நம் மீது வீசும் அடக்குமுறை பெரிதல்ல. அடக்குமுறை ஆபத்தானது மட்டுமல்ல! அடக்குமுறை ஒரு விசித்திரமான சக்தி. அதைக்கண்டு அஞ்சுபவர்கள் நாங்களல்ல. அடக்குமுறையைக் கொண்டே கட்சியை நடத்த முடியாது. மக்களை மடமையினின்றும் மீட்போம்; மனித சமுதாயத்தைப் பயம் என்ற சுடுகாட்டிலிருந்து வாழ்வு மாளிகைக்கு அழைத்துச் செல்லுவோம். மனித உலகே எனது கடவுள் அதற்குச் சேவை செய்வதே என் மதம் என்று முழக்கமிட்ட சாக்ரடீசுக்கும் மதவெறி நச்சுக் கோப்பையைத் தந்தது, பரிசாக! ஆனால், அழிந்தது மதவெறி; அதற்காக உயிர்விட்ட சாக்ரட்டீஸின் தத்துவமல்ல. உலகத்தைப் பற்றிய உண்மையை உணராதவர் களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ! இன்று உலகம் இவர்களைப்பற்றி என்ன பேசுகிறது?
சார் அரசனின் கொடுங்கோன்மையைக் களைந்து சமதருமக் கொடியைப் பறக்கவிட்ட லெனினைப்பற்றி இன்று உலகம் என்ன பேசுகிறது?
முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் (ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்) இப்பொழுதுள்ள சர்க்காரைப் பற்றி விவசாயிகளிடையிலே என்ன பேச்சுப் பேசுகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு? மந்திரி அவிநாசியார் (அவிநாசிலிங்கம் செட்டியார்) இந்தி ஏகாதிபத்தியத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதைப் பார்த்தீர்களா? நிலைமை எவ்வளவு மாறியிருக்கிறது பாருங்கள்.
நாம் எவ்வளவோ வெற்றிகளைப் பெற்றுவருகிறோம். திராவிட நாடு இதழின்-ஜாமீன் வழக்கிலே, நாம் பெரும் வெற்றி பெற்றோம். மக்கள் மன்றத்திலே இப்பொழுது பல வெற்றிகளைப் பெற்றுவருகிறோம். ஏனெனில் நம் வாதத்தில் நேர்மை உண்டு. ஆம்! அத்துடன் வாதாடுவதிலே நாம் திறமைசாலிகள் என்பதும் உண்மையே! அதையும் மறைப்பானேன்? வாதாடுவதிலே திறமையுள்ளவர்கள் என்பது மட்டுமல்ல, வெற்றிக்குக் காரணம். நம்முடைய வழக்குகள் நியாயமானவை; நேர்மையானவை. ஆதலால்தான் அவ்வளவு சுலபத்திலே நமக்கு வெற்றி கிடைக்கிறது.
தியாகராயர் வகுத்த அடிப்படை!
தியாகராயர் தான், நாம் வெற்றிமேல் வெற்றிபெற வழி காட்டினார். இருட்டறைகளிலும் காட்டு நிலத்திலும் கூட்டம் கூடி இயேசுநாதர் உபதேசத்தைக் கேட்டு உலகம் உயர்ந்தது போல, தியாகராயரின் சொற்கள் தென்னாட்டில் மெல்ல மெல்ல ஏழை எளியோர் குடிசையில் குடிபுகுந்து, பின்னர் மாளிகைகளில் எல்லாம் சென்று, மக்கள் மன்றத்திலே புதியதோர் எழுச்சியை உண்டாக்கி விட்டது.
சர்.தியாகராயர் புதுமை பல செய்து காட்டினார். அதிலே தலைசிறந்த புதுமைதான் இந்தப் பார்ப்பனரல்லாதார் புரட்சி. அது மிக அபூர்வமான வெற்றியைத் திராவிடருக்குத் தந்தது.
தியாகராயாரைப் பற்றிய தொகுப்பு நூல் ஒன்று நமக்கு மிகமிகத் தேவை. திருவல்லிக்கேணி-
திராவிட முன்னேற்றக் கழகத்தார் இந்த நல்ல பணியிலே ஈடுபடவேண்டும். தியாகராயரின் குடும்பத்தாரிடமும், தியாகராயரின் அன்பர்களிடமும் சென்று அவரைப் பற்றிய முக்கியமான குறிப்புகளைச் சேகரித்து, அடுத்த ஆண்டிலே தியாகராயரைப் பற்றி அழகிய தொகுப்பு நூலை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சர்.பி.தியாகராய செட்டியார், டாக்டர். நடேச முதலியார் ஆகிய இருவரின் சரித்திரமே இன்னும் எழுதப்படவில்லை! தமிழ் ஆராய்ச்சியிலும் தமிழ்த்தொண்டிலும் ஈடுபட்டிருக்கும் நம்முடைய அறிஞர் (பன்மொழிப் புலவர்) கா.அப்பாதுரை அவர்கள் இந்தப் பணியிலே ஈடுபட வேண்டுமென்று அவரையும் அன்புடன் வேண்டிக் கொள்ளுகிறேன்.
கூட்டம் கூடி நாம் பேசுவதோடு நில்லாமல் இதுபோன்ற ஆக்கவேலை களிலும் ஈடுபட வேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தியாகராயர் வாழ்க்கைக் குறிப்புகளோடு டாக்டர். நடேச முதலியார் அவர்களின் வாழ்க்கையையும் சேகரிக்க முற்படுங்கள். நம்மைவிட்டுப் பிரிந்த இவ்விரு பெரியாரின் சரித்திரங்கள் அவசியம் எழுதப்பட வேண்டும்.
மறைந்த நம் மாவீரர்-வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் நினைவு நாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடிய உங்களை மனமுவந்து பாராட்டுகிறேன்.
தியாகராயர் நம்மைவிட்டுப் பிரிந்தார். ஆனால், அவரது ஞாபகம் நம்மைவிட்டுப் பிரியாது. சர்.பி.தியாகராயர் அரும்பாடுபட்டு வளர்த்த கொள்கைகளைக் கடைப்பிடித்து அதனின்றும் வளர்ச்சிபெற்று உயர்ந்தோங்கி வந்திருக்கும் திராவிடர் இயக்கம் வெற்றிமேல் வெற்றி பெறும் என்னும் உறுதியோடு நீங்கள் வீடு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என் பேச்சை முடிக்கிறேன்.
(அறிஞர் அண்ணா அவர்கள் 30-6-1950ஆம் ஆண்டு அன்று சென்னை - திருவல்லிக்கேணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சர்.பி. தியாகராயரின் நினைவு நாள் கூட்டத்தில் ஆற்றிய உரை)
பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை
சென்னையில் 20-11-1916ஆம் ஆண்டில், மாநாடு ஒன்று நடைபெற்றது. அம் மாநாட்டிற்கு வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும், தகுதியும் செல்வாக்கும் உடைய பிராமணரல்லாத பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். பிராமணரல்லாத பெருமக்கள் முன்னேற்றத்திற்காக, செய்தித்தாள், வெளியிடவேண்டுமென்றும், அவர்கள் உரிமைகளைக் காப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றை அமைக்கவேண்டுமென்றும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க ஆங்கிலம், தமிழ், தெலுங்கு முதலான மொழிகளில் நாளிதழ்கள் வெளியிடுவதற்காக தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டு வியாபார நிறுவனம் தொடங்கப்பெற்றது; தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது.
தென்னிந்திய மக்கள் சங்கம் கீழ்க்கண்ட கொள்கை அறிக்கையைப் பிராமணரல்லாத மக்களுக்கு வெளியிட்டது. அது சங்கச் செயலாளர் இராவ்பகதூர் பி. தியாகராயச் செட்டியார் அவர்கள் பெயரால் வெளிவந்தது.
கொள்கை அறிக்கை
இந்திய சுயஆட்சி இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சென்னை மாகாணத்திலுள்ள முக்கியமான பல பிராமணரல்லாத வகுப்பினரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து அறிவிக்க வேண்டிய நிலை இப்பொழுது தோன்றியுள்ளது. மேலும் தற்காலம் அரசியலில் இவர்களுக்குள்ள நிலை என்ன என்பதனையும் குறிப்பிட வேண்டியது இன்றியமையாததாகிவிட்டது.
இம் மாநிலத்தின் மக்கள் தொகை 4.5 கோடி ஆகும். அதில் நான்கு கோடிக்கு குறையாதவர்கள் பிராமணரல்லாதவராவர். வரி செலுத்துவோர்களில் பெரும்பான்மையோரும் அவர்களேயாவர். மேலும் குறுநில மன்னர்கள், பெருநிலக்கிழார்கள், விவசாயிகள் ஆகியோரும் பிராமணரல்லா தவரே; சென்னையில் அரசியல் என்ற பெயரால் நடைபெறும் இயக்கங்களில் பங்கு கொள்ள உரிமை இருந்தும் இவர்கள் அதில் பங்கு கொள்ளவில்லை. மக்களிடையே இவர்களுக்குள்ள செல்வாக்கை நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிதும் இவர்கள் பயன்படுத்தவில்லை.
எல்லாம் கட்டுப்பாடாக நடைபெறும் இக்காலத்தில் தங்களுடைய உரிமைகளை காப்பாற்றிக் கொள்ளவோ, அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் தங்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வதைத் தடுக்கவோ இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இவர்களுடைய சார்பில் உண்மையைக் வெளிப்படுத்துவதற்கு இவர்களிடம் பத்திரிகைகளும் இல்லை.
15 லட்சம் பேர்களே உள்ள பிராமணர்களின் நிலையைக் கவனிக்கும்போது, பிராமணர் அல்லாத இவர்களுடைய அரசியல் வாழ்க்கை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.
அரசாங்க அலுவல்கள்
தற்போது, சென்னை எக்சிகியூடீவ் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு
சர்.அலெக்சாண்டர்
கார்டியூ,1913ஆம் ஆண்டில் பொதுப்பணிக் குழுவின் முன், சில சான்றுகளை அளிக்குங்கால், இந்த மாகாணத்தில் பிராமணர், பிராமணரல்லாதாரின் நிலை எவ்வாறுள்ளது என்பதை விளக்கமாகக் கூறியுள்ளார். பிராமணரல்லாதாருக்காகப் பரிந்து பேசவேண்டுமென்று அவர் கூறவில்லை, இருந்த நிலையை விளக்கினார். இண்டியன் சிவில் சர்வீசுக்கென, இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஒரே சமயத்தில் வைக்கப்படும் தேர்வுகளில், பிராமணர்களே முழுதும் வெற்றிபெறுகின்றனர் என்றார். பிராமணர்களைப் பற்றிக் குறிப்பிட வந்த அவர், அவர்களை மிகச்சிறிய தனித்து வாழும் சாதியினர் என்கிறார்.
1892ஆம் ஆண்டு முதல் 1904ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில், வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பிராமணர்கள் ஆவர்; அது 100-க்கு 95 சதவிகிதமாகும். கடந்த 20 ஆண்டுகளில் மைசூர் மாகாணத்தில், மைசூர் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளில் பிராமணர்கள் 85 சதவிகிதம் இடத்தைக் கைப்பற்றினர். சென்னை மாகாணத்தில், உதவிப் பொறியாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டபோது, அதே 20 ஆண்டு காலத்தில், பிராமணர் 17 பேராகவும், பிராமணரல்லாதார் நான்கு பேராகவும் எடுக்கப்பட்டனர். கணக்குத் தணிக்கைத் துறையில் நடைபெற்ற தேர்வுகளிலும் இதே மாதிரி முடிவே இருந்தது. சென்னை மாகாணத்தில், உதவி கலெக்டர் 140 இடங்களில் பிராமணர்க்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதார்க்கு 30 இடங்கள்; ஏனைய இடங்கள் முகம்மதியர், இந்திய கிறித்தவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் முதலானவர்களுக்குக் கிடைத்தன. மற்றொரு வியப்பு என்ன எனில், போட்டித் தேர்வு வைக்காத ஆண்டுகளிலும் கூட ஆட்களை நியமிப்பதில் பெரும் பகுதி, பிராமணர் கையில்தான் இருந்தது என்பதாகும்.
இவ்வாறு சர்.அலெக்சாண்டர் கார்டீயூ குறிப்பிட்டு விட்டு, மேலும் குறிப்பிடுகிறார்!
1913ஆம் ஆண்டில் மாவட்ட நீதிமன்ற நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களுக்குப் பிராமணர்கள் 93 இடங்கட்கும், பிராமணரல்லாதார் 25 இடங்கட்கும், இந்திய கிறிஸ்தவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் எஞ்சிய இடங்கட்கும் நியமிக்கப்பட்டனர் இந்தப் புள்ளி விவரங்களிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் இந்தியாவில் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வு என்பது பெரும்பாலும் முழுதும் பிராமணர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டு இருந்தது என்றும், பிராமணரல்லாதார்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதும் வெளிப்படையாகின்றது என்று அவர் ஒரு முடிவுக்கு வந்தார். சென்னை அரசிற்கு உட்பட்ட சுதேச சமத்தானங்களில் என்ன நிலை இருந்து வருகின்றது என்பதை சர். அலெக்சாண்டர் குறிப்பிடவில்லை. அங்கும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகின்றது. இது தவிர அதிகாரிகள் தங்கள் மனம்போல் நியமிக்கும் கீழ்நிலை உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது தெரியவரும்.
இப்பொழுது அரசாங்க அலுவல்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள நாம் புள்ளி விவரங்களைப் பார்க்க வேண்டாம். இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த பதவிகள் எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகின்றன என்பதை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆளுநரின் ஆட்சிக் குழுவிற்கு இந்தியர்களும் நியமிக்கப்படலாம் என்று முடிவு செய்தபின் மூன்று பேர்கள் வரிசையாக நியமிக்கப் பெற்றனர். அதில் கடைசி இருவர் பிராமண வழக்கறிஞர்கள். அய்ந்து இந்திய உயர்மன்ற நீதிபதிகளில் நால்வர்-
அதாவது இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் - அனைத்திலும் பிராமணர்களே நியமிக்கப்பெற்றனர்.
1914ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு ஒரு புதிய செயலாளர் பதவியைத் தோற்றுவித்து, அதில் ஒரு பிராமணரை நியமித்தனர். ரெவினியூ போர்டின் (வருவாய்த் துறை வாரியம்) இந்தியச் செயலாளர் ஒரு பிராமணர். அரசாங்க அலுவலர்களிலிருந்து மாவட்டக் கலெக்டர்களாக (ஆட்சித் தலைவர்களாக) இருவர் நியமிக்க வேண்டிய பொழுது பிராமணர்களே நியமிக்கப்பெற்றனர்.
பொது நிறுவனங்கள்
அரசாங்க அலுவல்களில் காணப்பட்ட நிலையே நகரவை, மாவட்டக் கழகம் முதலிய நிறுவனங்களிலும் இருந்து வந்தது. பிராமண வாக்காளர்கள் அதிகமாக இருந்த தொகுதிகளில் பிராமணரல்லாதார் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. பிராமணரல்லாத வாக்காளர்கள் எல்லாரும் ஒற்றுமையாய் ஒருவரை ஆதரிப்பது கிடையாது. ஆனால் பிராமணர்கள், யார் போட்டியிட்டாலும், பிராமணர்களையே ஆதரிப்பர்.
சென்னைப் பல்கலைக்கழக இந்திய உறுப்பினர்களில் பெரும்பான்மை யோர் பிராமணர்களாயிருந்தபடியால் பல்கலைக்கழகத்திலிருந்து, சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில், பிராமணரல்லாதார் எப்போதும் வெற்றி பெறுவது இல்லை. இதனால் எத்துணைத் தகுதியுடையோராயிருப்பினும் பிராமணரல்லாதார் இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை. போட்டியிட நேர்ந்தால், ஆங்கிலேய உறுப்பினர்களின் ஆதரவுகொண்டே வெற்றி பெறமுடியும்.
1914ஆம் ஆண்டுக்குரிய சென்னைச் சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற குஞ்ஞராமன் நாயர் கேட்ட கேள்விக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில், பிராமணர்கள் 452 பேர், பிராமணரல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தினர் 74 பேர் என்று பதில் கூறப்பட்டது.
1907ஆம் ஆண்டிலிருந்து பதிவுபெற்ற பட்டதாரிகள் சார்பில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் பிராமணர்களே. 1907ஆம் ஆண்டிலும் சரி, அல்லது சட்டசபையில் பதில் கூறிய 1914ஆம் ஆண்டிலும் சரி,
எப்பொழுதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிராமணர்களே பெரும்பான்மையாக இருந்தமையால் எத்துணைத் தகுதி பெற்றவராயிருப்பினும், பிராமணரல்லாதார், தேர்தல்களில் வெற்றி பெற்றதே கிடையாது. இந்தத் தேர்தல்களை நடத்துவதில் ஒரு தனிச்சாதியினர் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றிருந்ததன் பயனாய் டில்லி சட்ட சபையிலாயினும் சரி, சென்னை சட்ட மன்றத்திலாயினும் சரி, நகர சபைகளிலாயினும் சரி, பிராமணரல்லாதார் நிலை அவ்வாறே இருந்து வந்தது. ஏதேனுமொரு சமயம் நேர்மையான ஓர் ஆட்சியாளர், பொது நிறுவனங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் மிகுதியாயிருப்பதைக் கருதிப் பிராமணரல்லாதாரின் (பிரதிநிதியாக) சார்பாளராக யாரேனும் நியமிக்கப்பட்டால், பிராமணப் பத்திரிகைகள் அவரைக் கடுமையாகக் கண்டிக்கும்.
இதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால், சட்டசபை மேலவைக்கு, மேன்மை தங்கிய பென்ட்லாண்ட் பிரபு, சிலரை நியமித்த பொழுது, பத்திரிகைகள் எவ்வாறு அவரைக் கண்டித்தன என்பதே போதும். அரசினர்க்கு உட்பட்ட பொது நிறுவனங்களைத் தவிர, பிற அரசியல் கட்சிகள் போன்றவைகளிலும், சென்னையில் ஆயினும், மாவட்டங்களில் ஆயினும், தேர்தல் தொடர்பான சில புள்ளி விவரங்களைப் பார்த்தால் இதே நிலைதான் அங்கும் இருப்பது தெரியும். அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம். அனைத்திந்திய காங்கிரசுக் குழுவுக்குச் சென்னை மாநில உறுப்பினர்களாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் பிராமணர்களே! அந்தக் குழு, செய்யும் முடிவு உலகம் முழுவதும் பறையறைவிக்கப்படும் போது, இம் மாநிலத்திலுள்ள நான்கு கோடி பிராமணரல்லாதவர்களின் கருத்தும் அதுவேயாகுமென்று பொருள்படும். பின்தங்கியவர்கட்கு ஏதேனும் சலுகைகள் கொடுக்கப்படும்போது அதைக்கண்டு ஆதிக்கத்திலிருக்கும் சாதியினர் கட்டுப்பாடாக எதிர்ப்பதை நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டு வருகிறோம்.
பிராமணரல்லாதாரும் கல்வியும்
இவ்வாறு காணப்படும் பிராமண ஆதிக்கத்திற்குக் காரணம் கூறுபவர்கள், பிராமணரல்லாதார்களைவிடக் கல்லூரிப் படிப்புப் பெற்ற பிராமணர்கள் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்க அலுவலகங்களிலும், பிற நிறுவனங்களிலும் அவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பர். இதை யாரும் மறுக்கவில்லை. பழங்காலம் தொட்டு அவர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம், இந்துக்களிலே உயர்ந்த, புனிதமான சாதி என்று கருதும் தன்மை, நிலையான நம்பிக்கை, இவற்றை நூல்கள் வாயிலாகவும் வாய்மொழியாகவும் சொல்லிச் சொல்லித் தாங்களே ஏனையோரைவிட உயர்ந்தவர்கள், தாங்களே கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டனர். இவையெல்லாம் ஏனைய இனத்தாரைவிட அவர்கட்கு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் செல்வாக்கைத் தேடித் தந்தன!
ஆங்கிலக் கல்வி அறிவைத் தவிர மற்றபடி, பாரம்பரியம், நாட்டின் உரிமை, சமுதாயத்தில் உள்ள செல்வாக்கு, அமைதியான வாழ்க்கைத் தொழில், மாநில முன்னேற்றம், எண்ணிக்கை-
இவையெல்லாம் பயனற்றவை என்று கருதலாமா? ஆதிமுதல் இவற்றிற்காக வாழ்ந்துவரும் மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது ஊக்கம் கொடுக்க வேண்டாமா? கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூடப் பிராமணர்கள் தாம் படித்தவர்கள் என்றும் கூறமுடியாது. வெகு காலத்திற்குப் பின்பு படிக்கத் தொடங்கினாலும் பிராமணரல்லாதாரும் அத்துறையில் முன்னேறி வருகின்றனர். ஒவ்வோர் இனத்தினரும் ஒவ்வொரு நிலையில் இருக்கின்றனர். செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், முதலியார் முதலிய வகுப்பினர் மிக விரைவாக முன்னேறி வருகின்றனர். மிகப் பின்தங்கியவர்கள்கூட மிக அக்கறையுடன் முன்னேறுவதற்காக உழைத்து வருகின்றனர். படிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோர்க்கும் ஏற்பட்டுவிட்டது.
பிராமணர்களில் காணப்படுவதைவிடப் பிராமணரல்லாதாரிடையே காணப்படும் கல்வி முன்னேற்றம் சமநிலையில் இருந்து வருகிறது என்று கூறலாம். ஏது காரணம் பற்றியோ கல்வி இலாகாவினர், பிராமணப் பெண்களுக்கும், விதவைகளுக்கும் கல்விச் சலுகைகள் காட்டி வருகின்றனர். இருந்தாலும் பிராமணரல்லாதாரைச்சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப் பெண்கள் கல்வி கற்றதாக இல்லை. பல வழிகளிலும், பல துறைகளிலும் பிராமணரல்லாதார், மாநில முன்னேற்றத்திற்காக, அடக்கமாகவும் பயனுள்ள முறையிலும் தொண்டு செய்து வருகின்றனர். அரசியலிலும், அரசாங்கத்திலும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாயிருப்பதால், பிராமணரல்லாதார் செய்யும் தொண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காது மறைக்க ஏதுவாயிருக்கிறது.
ஓர் இயக்கம் வேண்டும்
அறிவுத்துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில், தேர்வுகளில் தேறுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவல்களில் உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் ஏகபோகமாக உரிமையாக்கிக் கொண்டு, பெரும்பான்மை வகுப்பினர்களில் படித்த ஒரு சிலருக்குக் கூட இடங்கொடுக்காமல் இருந்துவருவதேயாகும். அவர்கள் எல்லாத் தகுதியும், பண்பாடும் பெற்றிருந்தும், அவர்கட்கு வாய்ப்புகொடுக்கப்படவில்லை.
எத்தனையோ இடையூறுகள் இருந்தும், நீதித்துறையில் வழக்கறிஞர் தொழில், மருத்துவம், பொறியியல் முதலான துறைகளில் பெரிய சமீன்களை ஆட்சி நடத்துவதில் பிராமணரல்லாதார்கள் பலர் மிகச்சிறப்புடன் விளங்கி வருகின்றனர். அவர்களில் சிலருக்கு இணையாக பிராமண வகுப்பில் ஒருவரையும் கூறமுடியாத அளவு அவர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தன் உரிமையை உணர்ந்து சுயமரியாதையுடன் அவர்கள் ஒன்றுசேர்ந்து முயற்சி செய்திருப்பார்களேயாயின், இன்று அரசாங்க அலுவல்களில், அவர்களின் பிறப்புரிமையாகிய முதலிடத்தைப் பெற்றிருப்பார்கள். தங்களுக்கென்று ஒரு சங்கம் இல்லாததாலும் தங்களுடைய கருத்துகளை வெளியிடப் பத்திரிகை இல்லாததாலும் எல்லோரும் தங்கள் தங்கள் உரிமையைத் தெரிந்துகொள்ள முடியாமற் போயிற்று!
படிப்படியான அரசியல் உரிமைகள் பெறவேண்டுமே தவிர, அதிகார உரிமையற்ற அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டியதில்லை. தீவிர அரசியல்வாதிகள், இப்பொழுது பெற்றுள்ள அரசியல் உரிமைகளால் திருப்தியடையவில்லை. சூழ்நிலையைக் கவனிக்காது மேலும் மேலும் ஏதேனும் உரிமைகளைக் கோருவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி. அம்முறையில் இப்பொழுது பிராமணராகிய அவர்கள் சுய ஆட்சி கேட்கின்றனர். முன் அனுபவங்களைக் கொண்டு பார்த்தால், நம்முடைய கருத்தைச் சரியான நேரத்தில் தெரிவிக்கவில்லையென்றால், அகில இந்தியாவும் அவர்கள் கோரிக்கையை ஆதரிப்பதாகக் கருதப்படும். அளவுக்கு மிஞ்சிய இத்திட்டத்தைப் பற்றியோ, அல்லது இம்பீரியல் சட்டமன்ற உறுப்பினர்கள் 19பேர் வைசிராயிடம் கொடுத்த திட்டத்தைப் பற்றியோ இங்கு நாம் விரிவாகக் கூறவேண்டியதில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் விரும்பவில்லை. இன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு சாதியினர் வகுப்பினர்களுக்கு நீதி கிடைக்கவும், அவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்கள்தான்.
தவறினால் நாட்டில் தேசபக்தி இன்றி ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சீரழிய நேரிடும். யாதொரு தகுதியுமற்ற அரசியல் அமைப்பைத் தயார் செய்வதைச் சில பிராமண அரசியல்வாதிகள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். அத்தகைய அரசியல் அமைப்பை நாங்கள் விரும்பவில்லை. மக்களிடத்தில் படிப்படியாக ஆட்சியை எப்படி ஒப்படைக்க வேண்டுமென்பதை முடிவு செய்து, முன் யோசனையுடன், தாராளமாக உரிமைகளைக் கொடுத்து ஆட்சி நடத்த மக்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கவேண்டும். ஏ.ஓ.க்யூம், பானர்ஜி, பட்ருடின், தயாப்ஜி, எஸ்.இராமசாமி முதலியார், ரெங்கையா நாயுடு, ராவ் பகதூர் சபாபதி முதலியார், சர். சங்கரன் முதலிய பேரறிஞர்கள் இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க நிலையில் அதற்கு வழிகாட்டும் தலைவர்களாக இருந்து வந்தனர்.
அப்பொழுது நம் மாகாணத்திலுள்ள பெருமக்கள் பலர் அதனை ஆதரித்து வந்தனர். அக்காலத்தில் அதன் அமைப்பும் பெயரும் ஏதோ ஒரு வகையில் இருந்தாலும், அதன் போக்கு ஓர் உண்மையான தேசிய இயக்கமாக இருந்தது. பழைய கொள்கையில் சிலவற்றை இன்னும் அது பின்பற்றுகின்றது. ஆனால், அன்று அது என்ன நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டது, என்ன முறையில் நடைபெற்றது, இன்று அது யாரால், எப்படி நடத்தப்படுகின்றது என்பதைப் பார்த்தால் இம் மாநிலத்தில் சுயமரியாதையுள்ள எந்த பிராமணரல்லாதாரும் அதை ஆதரிக்க மாட்டார். சமூகப் பிற்போக்கு வாதிகளும், நிலைமையை உணராத பொறுமையற்ற அரசியல்வாதிகளும் இன்று காங்கிரசைக் கைப்பற்றியுள்ளனர். ஜனநாயக அடிப்படையில் அதன் அமைப்பு இருந்தாலும் பொறுப்பற்ற சிலர் ஆதிக்கத்தில் அது இருந்துவருகின்றது. நாட்டையும் மக்களையும் அறிந்து தங்கள் கடமையினை உணர்ந்த, பொறுமையும் அனுபவமும் வாய்ந்த அரசியல்வாதிகள் விரைவில் காங்கிரசில் ஆதிக்கம் பெற்று, நாட்டு நிலைக்கு ஏற்ற வழியைக் காட்ட வேண்டுமென்று நாங்கள் உண்மையாக விரும்புகிறோம்.
வகுப்புவாத ஆட்சியல்ல!
ஆட்சியில் இன்றுள்ள சூழ்நிலைக்குத் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வகுப்பு அல்லது வர்க்க ஆட்சியையும் நாங்கள் முழுவதும் குறை கூறவில்லை. இந்தியாவின் உண்மையான நன்மையைக் கருதி, ஆங்கில ஆட்சி முறையைப்போன்று நீதியும் சம உரிமையும் விளங்கும் ஆட்சியே வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ஆங்கில ஆட்சியில் பற்றுடையவர்கள். அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாட்சியில் பல குறைபாடுகளும் குற்றங்களும் காணப்படினும் அது நேர்மையாகவும் அனுதாபத்துடனும் நடைபெறுகின்றது.
எனினும் நாட்டைப்பற்றி மேலும் சரியாகத் தெரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் மக்கள் விருப்பத்திற்கு இணங்க ஆட்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், மக்கள் விருப்பம் என்ன என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். முதலில் ஒவ்வொரு வகுப்பு, இனம் என்ன கருத்துடன் இருக்கின்றது, அவற்றின் தேவையென்ன என்பனவற்றை நன்கு அறிந்துகொண்டே ஆட்சியில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அவற்றை அறிந்து கொள்வதற்கு வழக்கமாகப் பின் பற்றும் முறைகளையே கையாளக்கூடாது. சமுதாயத்தில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேற்றுமைகள் மறையத் தொடங்கினால் மட்டுமே சுயஆட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்று வருகின்றோம் என்று கூறலாம். ஆகவே, அரசியல்வாதிகள் தங்கள் முன்னால் உள்ள பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண்பதில் முனைந்து நிற்கவேண்டும்.
அதிகாரத்தை எல்லோருக்கும்
பகிர்ந்து அளிக்கும் சுய ஆட்சி!
போரில் வெற்றி கண்டவுடன் ஆங்கில அரசியல்வாதிகளும், நாடாளுமன்றமும் இந்திய அரசமைப்பைப் பற்றிக் கவனிப்பார்கள். அரசியல் உரிமைகள் வேண்டும் என்று கோருவதற்கு இந்தியா உரிமை பெற்றுவிட்டது. அரசமைப்பு எப்படி இருக்கவேண்டுமென்றால், உண்மையான உரிமைகள் விரிவாக இருக்கவேண்டும்; ஒவ்வோர் இனத்தினருக்கும், வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும், தகுதியையும், எண்ணிக்கையையும் மனத்திற்கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பைக் கொடுக்கவேண்டும் . உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை முழு அதிகாரமும், நிதியைப் பயன்படுத்தும் உரிமையையும் கொடுக்க வேண்டும்; சுயமரியாதைக்கு இழிவு இல்லாது, ஆங்கில சாம்ராச்சியத்திற்கு உட்பட்ட பிற சுதந்திர நாடுகளுக்கு ஒப்பான தகுதியைக் கொடுக்க வேண்டும்.
பிராமணரல்லாதாரின் முதற்கடமை
விழிப்படைந்த பிராமணரல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில்தான் இருக்கின்றது. அவர்கள் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரிது; அத்துடன் மிக அவசரமானதுமாகும். முதல் வேலையாகச் சிறுவர் சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்கவைக்க வேண்டும். பல இடங்களில் சங்கங்களைத் தோற்றுவித்து பிராமணரல்லாதார்க்கு எந்தெந்தச் சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறி, அதிகமானவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நிதி திரட்டி ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். கல்வித்துறையில் நாம் முன்னரே கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்.
அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம், அரசியல் முன்னேற்றம் முதலியவற்றிற்கும் நாம் தீவிரமாக உழைக்கவேண்டும். அதற்கான பல பத்திரிகைகளைத் தொடங்கி சங்கங்களும் ஆங்காங்கு அமைக்கவேண்டும். உரிமைகளுக்காகப் போராடவேண்டும். இவற்றைச் செய்யாது நாம் இதுவரை வாளாவிருந்தோம். அதைச் சில சுயநலவாதிகள் தங்கள் நலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டனர்.
அதன் பயனாக, பிராமணரல்லாதார்களிடையே மிக அதிருப்தி காணப்படுகிறது. தங்களை ஒத்த பிராமணர்கள் மட்டும் எல்லாத் துறைகளிலும் முன்னேறி செல்வாக்குடன் இருப்பதை அரசினர் சரியாக உணரவில்லை என்று கருதுகின்றார்கள். நாள்தோறும் அதிருப்தி வளர்ந்து வருகின்றது. அரசாங்கத்தின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வரவேண்டும். அத்துடன் முதலில் பிராமணரல்லாதார் தங்களுக்குத் தாங்களே உதவிசெய்து கொள்ளவேண்டும். கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் முதலிய பல துறைகளிலும் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பின்புதான் ஆங்கிலக் குடிமகன் என்ற முறையில் அவர்கள் செல்வாக்குப் பெற முடியும். தேசிய வளர்ச்சி என்று கூறப்படுவதெல்லாம் ஒவ்வொரு மனிதனும், இனமும் வகுப்பும் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைப் பொறுத்ததேயாகும்.
எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால், இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச்சியை முதன்மையாகக் கருதவேண்டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும்பொழுது, தான் தாழ்ந்தவன் என்று கருதாது, சுயமரியாதையுடன் சமஉரிமை பெற்றவன் என்று எண்ணவேண்டும். சுயமரியாதையுடன் சமநிலையிலிருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.
நூல் - அண்ணா கண்ட தியாகராயர்!
ஆசிரியர் - அறிஞர் அண்ணா
Comments
Post a Comment