திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார் - பகுதி - 2
தொழிலாளர் மத்தியில்...
நீதிக்கட்சியா?
இது - பணக்காரர்களின் கட்சி!
செல்வச்சீமான்களின் கூடாரம்!
ஜமீன்தார், மிட்டா, மிராசுகளின் கட்சி!
ஜரிகைத் தலைப்பாக்கள், வெள்ளித்தடி, மேல்நாட்டு
உடை அணிந்தவர்களின் கட்சி!
ஏழைகளுக்காக, தொழிலாளருக்காக, பாட்டாளி மக்களுக்காகத் தோன்றிய கட்சியல்ல!
பதவிக்காகவும், பட்டங்களுக்காகவும் வெள்ளையரின் வால் பிடித்த கட்சி!
இப்படித்தான் நீதிக்கட்சியின் எதிரிகள் பாமர மக்களை ஏமாற்றத் தவறான பிரச்சாரம் செய்தனர். அதனை உண்மை என்று நம்புகிற ஏமாளிகள் இன்றும் இருக்கின்றனர்.
ஆனால், உண்மை நிலை என்ன?
நீதிக்கட்சி 1920 முதல் 16 ஆண்டு காலம் பதவியில் இருந்தது. அந்தக் காலத்தில் தொழிலாளர் முன்னேற்றத்திற்காகவே, அவர்களின் சுகவாழ்விற்காகவே காங்கிரசு கட்சி பிறந்தது போல் நாடகம் ஆடினர் தேசியவாதிகள்.
1918-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் திரு.வி.க. அவர்கள்தான். இந்தச் சங்கம் தான் இந்தியாவிலேயே தொழிற் சங்க அடிப்படையில் தொடங்கப்பட்ட முதல் சங்கமாகும். இந்தச் சங்கம் வளர உறுதுணையாக இருந்தவர்களில் நம் டாக்டர் நடேசனாரும் ஒருவர் ஆவார் என்று திரு.வி.க. தன் வாழ்க்கைக் குறிப்புகளில் மறக்காமல், மறைக்காமல் குறிப்பிட்டிருப்பது இன்றும் நாம் படித்து அறியலாம்.
வறுமையையே அணியாகக் கொண்ட தொழிலாளரின் நல்வாழ்விற்காகப் பாடுபடவும், உழைக்கவும், டாக்டர் நடேசனார் சளைக்கவில்லை என்று ஜி.இ. வாக்கர், நகரசபையில் அய்ரோப்பியப் பிரதிநிதியாக இருந்தவர் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
சென்னையில் பக்கிங்காம் ஆலை வெள்ளையரால் நடத்தப்பட்ட பெரிய ஆலையாகும். இதில் வேலை வாய்ப்புப் பெற்றவர்கள் பெரும்பாலும் திராவிட இனத்தை சேர்ந்தவர்களே. 1921-ஆம் ஆண்டு மே மாதத்தில் பக்கிங்காம் ஆலை சில சச்சரவுகள் காரணமாக மூடப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்தது நீதிக்கட்சியே. ஆனால், குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மட்டுமே அமைச்சர் அவைக்கு இருந்தது. ஏன் என்றால், அப்போது இரட்டையர் ஆட்சி. முக்கியமான இலாகாக்கள் அனைத்தும் வெள்ளையர் கைவசமே இருந்தன. வேலை நிறுத்தத்தின் காரணமாகத் தொழிலாளர் மீது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் தொழிலாளர்களுக்கிடையே பகைமை மூண்டு வீட்டுக்குத் தீ வைத்தல், கொலை செய்தல் போன்ற தீய செயல்கள் வளர்ந்தன. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆதிதிராவிடர் பெருங்குடி மக்களே.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள். திரு. எம்.சி. இராஜா ஆதிதிராவிடர் நலத்திற்காக அரணாகப் பாடுபட்டார். இவற்றையெல்லாம் கண்ட டாக்டர் நடேசனார் மனம் கலங்கி, பரிகாரம் தேட முற்பட்டார். அவர் முதலாளிகளைப் பார்த்து பரிகாரம் காண முற்பட்டார். ஆனால், குழப்பத்தையே குறிக்கோளாகக் கொண்ட காங்கிரசுகாரர்கள் குறுக்கே நின்றனர். நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் மூலம் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்துச் சமாதான நிலையை ஏற்படுத்த டாக்டர் நடேசனார் பெரிதும் பாடுபட்டார். அது மட்டுமல்ல, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் குழப்பம் நடக்கும் இடங்களில் நடமாடி, பலரைக் கண்டு பேசி, அறிவுரை கூறினார். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் தொழிலாளர் தலைவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று பாடுபட்டவருள் டாக்டர் நடேசனாரும் ஒருவர் என்று காங்கிரசு இயக்கத்தின் மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தன்னுடைய வாழ்க்கைக் குறிப்புகளில் நேர்மையுடன் கூறியிருப்பது நீதிக்கட்சி எந்த அளவிற்கு தொழிலாளர் நலம் பேணப் பாடுபட்டது என்பதை எவரும் எளிதில் அறியலாம்.
இந்த தொழிலாளர் கிளர்ச்சிக்கு மூலகாரணம் திரு.வி.க. என்பதை கவர்னர் வெலிங்டன் முடிவு கட்டி, அவரை நாடு கடத்த முடிவு செய்தார். ஆனால் இயலவில்லை. காரணம், நீதிக்கட்சித் தலைவர்கள் அதற்கு இசையவில்லை. திரு.வி.க.வை நாடு கடத்துவதானால், எங்களுக்குப் பதவி தேவை இல்லை. இராஜினாமா செய்யத் தயார் என்று கூறியதே ஆகும்.
சர்.பிட்டி.தியாகராயர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பசி பட்டினியால் வாடி வதங்கக் கூடாதே என்று அவர்களுக்காக மண்டியிலிருந்து அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், புளி போன்ற பொருள்களையும், கொத்தவால்சாவடியிலிருந்து காய்கறிகளையும் தொடர்ந்து வழங்கிட ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அறியும்போது நீதிக்கட்சி திராவிடர் இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காக எப்பாடு பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.
திரு.வி.க., நீதிக்கட்சியின் எதிரிதானே, வெள்ளையர் நாடு கடத்தினால் நமக்கென்ன என்று பதவியில் உடும்புப் பிடியில் உட்கார்ந்து கிடக்க நீதிக்கட்சி விரும்பவில்லை. இதெல்லாம் நம் கடந்தகால வரலாற்றுச் சிறப்புகள். இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு விட்ட காரணத்தால் நீதிக்கட்சியைக் குறை கூறி இட்டுக்கட்டிப் பழித்துப் பேசும் அரசியல் அரைவேக்காடுகள் நாட்டில் மலிந்து விட்டனர். திராவிடரின் பூர்வீகப் பெருமை, கடந்தகாலச் சிறப்பு, முறையாக, முழுமையாக இத்தலைமுறையினருக்கு எழுதித் தராதது யார் குற்றம்? நம் குற்றமே!
ஆறுமாத காலம் நீடித்த இந்தத் தொழிலாளர் போராட்டத்தை திரு.தியாகராயரின் வேண்டுகோளை மதித்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர் என்பதை திரு.வி.க. அவர்களே கூறியிருக்கிறார். வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? இராஜா சர். இராமசாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் சர்.பிட்டி. தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற்பெருக்கில் மூழ்கி, தொழிலாளர் பலர் வேலைக்குத் திரும்பினர். மாதங்கள் ஆறாயின. இனியும் பிடிவாதம் வேண்டாம். உங்களுக்கு இராஜதந்திரம் வேண்டும். மில்களில் புது ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின், உங்களுக்குத் தொல்லை விளையும்; போலீஸ் காவலையும், இராணுவக் காவலையும் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால், அவர்களை ஒரே ஒரு வழியில் அப்புறப்படுத்தக் கூடும். நீங்கள் எல்லோரும் வேலைக்குச் செல்ல உறுதி கொண்டால், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அதனால், நீங்கள் உள்ளே போங்கள்; நன்மையே விளையும்; சங்கமும் சாகாது என்று பேசியது தொழிலாளர்களுக்குச் சிறந்ததாகத் தோன்றியது.
நீதிக்கட்சியினர் தொழிலாளர் தலைவர்கள் என்று பெயர் சூட்டிக் கொண்டு, தொழிலாளர்களிடம் சந்தா பெற்று, அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று ஏமாற்றுப் பேச்சு பேசியவர்கள் அல்லர். பல தொழிற்கூடங்களை இயங்காமல் செய்து, தொழிலாளர்களை நடுத் தெருவில் அனாதைகளாக விட்டவர்கள் அல்லர். தொழிலாளர் நம் இனத்தவர்; அவர்கள் வாழ வேண்டும்; அதற்காக என்ன செய்ய முடியுமோ அதனைத் திறம்படச் செய்து தொழிலாளர் நல்வாழ்வு வாழ பாடுபட்டவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள். தொழிலாளர்களுக்காக டாக்டர் நடேசனார் எப்பாடுபட்டிருக்கிறார் என்பதை நாம் இன்று கண்டு மகிழ்கிறோம்.
சட்டமன்றத்தில்...
1919-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி 1920-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. பட்டதாரிகள், வீட்டுச் சொந்தக் காரர்கள், அரசுக்கு வரி செலுத்துவோர் மட்டுமே வாக்காளர். அப்படி நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி, சுயராஜ்யா கட்சி, ஹோம்ரூல் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரசு பூரண சுயராஜ்யமே எங்கள் இலட்சியம் என்று ஒதுங்கிக் கொண்டது. ஆனாலும் காங்கிரசுக்காரர்கள் வேறு போர்வையில் போட்டியிட்டனர்.
டாக்டர் டி.எம். நாயர் போராடி, பார்ப்பனரல்லாதாருக்கென பெற்ற இடங்களை விட அதிகப்படியான இடங்களை நீதிக்கட்சி பெற்றது. சத்திய மூர்த்தி அய்யர், அன்னிபெசன்ட் அம்மையார் இவர்களின் கதை பலிக்கவில்லை. அந்தத் தேர்தலில் சென்னை மாநிலத்திலேயே அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் நடேசனார் அவர்கள்தான். இந்த மகத்தான வெற்றி, கவர்னர் வெலிங்டன் அவர்களை மட்டுமல்லாது நீதிக்கட்சித் தலைவர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியது.
அவர் பெற்ற அந்த வெற்றிக்குக் காரணம், அவர் தேர்தலுக்கு முன்னரே பல ஆண்டு காலம் பொதுத் தொண்டில் ஈடுபட்டு பல நன்மைகளை பலருக்குச் செய்திருப்பதுதான். இருந்தும், நீதிக்கட்சி அமைச்சர் அவையில் அவருக்கு இறக்கும் வரை வாய்ப்பு ஒருமுறைகூடத் தரப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை நான் கூறாமலே நீங்கள் அறிவீர். அன்றுதான் இப்படி திராவிட அரசியல் நிலை இருந்திருக்கிறது என்று கூறுவதற்கு இல்லை. இன்றும் அதே நிலைதான் என்பதை நாம் உணர்கிறோம்.
இடித்துப் புடைத்தவளுக்கு ஒருபடி, எட்டிப் பார்த்தவளுக்கு எட்டுப்படி என்று தமிழில்தான் ஒரு பழமொழி இருப்பதைப் பார்க்கிறோம்.
பாறையின் வெடிப்புக்கும், மணலின் சரிவிற்கும், விஷக் காற்றுக்கும் அஞ்சாது சுரங்கத்தினுள் சென்று தங்கத்தை வெட்டி வருபவன் வீட்டில் கரிமணியும், மஞ்சள் கயிறும்தான் கண்டு வருகிறோம்!
ஏழைத் தொழிலாளி பெரிய கோவில் கட்டுகிறான் - குளம் வெட்டுகிறான். ஆனால், காரியம் முடிந்ததும் அவன் கதி என்ன?
இப்படி நன்றி கெட்ட சமுதாயத்தில்தானே நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் டாக்டர் நடேசனாருக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து நம் இயக்கத் தலைவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். உலகைத் திருத்திய உத்தமர்களின் வாழ்க்கையில் பத்துக்கு ஒன்பது பேர் இப்படித்தான் முடிவு காலத்தில் அனுபவித்திருக்கின்றனர்.
டாக்டர் நடேசனார் என்ன, தான் தலைவனாக வேண்டும் என்றா இயக்கத்தைத் தொடங்கினார்? தன் குடும்பம், தன் மனைவி, மக்கள், உற்றார், உறவினர்கள் எல்லாரையும் இலட்சாதிபதிகளாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனா பொதுவாழ்வில் ஈடுபட்டார்? அவருக்கென்று இருந்தது அவருடைய ஒரே வாரிசு - சொந்த மகன் சரவணன். அவனும் மாநிலக் கல்லூரியில் படிக்கும் போதே அகால மரணமடைந்து விட்டான். அதனால் அவர் அடியோடு மனம் உடைந்து போகவில்லை. நாடே தன் வீடு, எல்லோரும் தன் உறவினர் என்று பரந்த - உயரிய இலட்சியத்துடன் பயணம் மேற் கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் எல்லோரையும்விட அதிக வாக்குகள் பெற்றவர் தான்! அதனால் ஆணவமோ, அகந்தையோ கொள்ளவில்லை. அவர் பெற்றிருந்த ஆற்றலுக்கு அவர் ஓர் அமைச்சராகவாவது பதவி பெற்று இருக்கலாம், அவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை, காரணம்? அவருக்கு மக்களைப் பற்றியிருந்த கவலையைப் போல, நீதிக்கட்சி மீது அவர் கொண்டிருந்த பற்றைப் போல் வேறு யாரும் கொண்டதில்லை. வீட்டில் வளர்ந்த சாதாரணக் குக்கல், எல்லாருக்கும் விசுவாசமாக இருந்த ஒரு ஜீவன், யார் விரட்டினாலும், யார் புறக்கணித்தாலும் அது வீட்டையே சுற்றிச் சுற்றிக் கிடப்பதை பார்க்கிறோமல்லவா? அதைப்போல் திராவிட இனத்தின் எதிர்கால நல்வாழ்விற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அவர், கோணல் புத்தி, குறுகிய நோக்கம், சுயநலம் படைத்தவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படவே இல்லை.
சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் சீரிய குறிக்கோள்களுக்காக, பார்ப்பனர் அல்லாத மக்களின் பாதுகாவலனாக வாதாடி, பார்ப்பனர்களையும், சுயராஜ்யா கட்சியினரையும் முக்கிய இலாகாக்களை நிருவகித்த வெள்ளையரையும் அவர் திக்குமுக்காடச் செய்தார்.
அரசுப் பணிகளில் அனைத்து வகுப்பினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் பங்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தை 1922-ஆம் ஆண்டிலேயே முதன்முதல் கொண்டு வந்தவர் டாக்டர் நடேசனார்.
எந்தெந்த இலாகாவில் எத்தனை பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிலவுகிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு சபையில் எடுத்துக் கூறி வாதாடியவர் அவர்.
வெள்ளையர் ஆட்சி பார்ப்பனர் ஆட்சியாக மாறி விடுவதற்குப் போதிய ஆதாரங்களைக் காட்டி, பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு உரிமையும், நீதியும் வழங்கப்பட வேண்டும் என முழக்கமிட்டவர் அவர். அந்தக் காலத்தில் காலி இடங்களுக்கு அந்தந்த இலாகா அதிகாரிகளே நேர்முகத் தேர்வு செய்து ஆட்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது.
இத்தீய ஏற்பாட்டினால் பார்ப்பனர் மட்டுமே பலன் அடைகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் கூறி, அந்த ஏற்பாட்டை மாற்றி, 1922-ஆம் ஆண்டிலேயே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத சமூகத்தினர்களுக்கு, அவரவர்களின் விகிதாசாரப்படி வேலை வாய்ப்புகள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நிரந்தர அரசு ஆணை பிறப்பிக்கச் செய்த மாவீரன், நம் டாக்டர் நடேசனார். அதன் பயனாகத்தான் முதன் முதலில் ஸ்டாஃப் செலக்ஷன் போர்டு ஏற்படுத்தப்பட்டது. இருந்தும், இதனால் கூட பார்ப்பனரல்லாதாருக்கு நீதி கிடைக்க வில்லை. காரணம்? அரசு உத்தரவை இந்த அமைப்பு எப்படி நடைமுறை படுத்தாது இருக்க முடியும் என்ற போக்கிலேயே செயல்பட்டது.
இதைக் கண்ட டாக்டர் நடேசனார் ஆத்திரமடைந்து பார்ப்பனர்களின் ஆதிக்க நிலையை மட்டம் தட்டத்தான் ஒரு தேர்வுக் குழு ஏற்படுத்த சட்டமன்றத்தில் முயன்று, வெற்றி பெற்றார்.
அக்காலத்தில் அரசாங்கத்தில் உயர்பதவிகள் பெரும்பாலும் வெள்ளையர் களாலேயே நிருவகிக்கப்பட்டது. அப்பதவிகளை இந்தியர் களுக்கும் தரப்பட வேண்டும் என்று காங்கிரசு கிளர்ச்சி செய்தது.
வெள்ளையர் வகித்த பதவிகளை இந்தியமயமாக்குவது என்றால், தென்னாட்டைப் பொறுத்தவரை அது பார்ப்பனர் மயமாக்குவதுதான் விளையக் கூடிய பலன் என்பதை டாக்டர் நடேசனார் சட்டமன்றத்தில் வாதிட்டு, இந்தியர்கள் என்றால் அது பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாத திராவிடர்கள், முகமதியர்கள், கிறித்தவர்கள், எல்லாருமே இந்தியர் அல்லவா என்று கேள்வி கேட்டு, நமக்காக எவ்வளவு புத்தி கூர்மையுடன் பேசி எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்துள்ளார் என்பதை நம்மால் இப்போது உணர முடிகிறது.
சட்டமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீது பேசும் போது, அரசுக்கு வருமானம் எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறதோ, அவர்களின் நலனுக்காக அரசு திட்டம் வகுத்துச் செலவு செய்வதுதான் முறை என்பதை விளக்கி, 100-க்கு 97 பேர்களாக உள்ள பார்ப்பனரல்லாதாரிடம் வசூலித்துக் கொண்டு, அவர்கள் நலத்தைப் புறக்கணித்து, 100-க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனச் சமூகத்தினர் பயன் அடையும் முறையில் அரசு வரவு - செலவு திட்டம் வகுப்பது அநீதியானது என்று தயக்கமின்றி, துணிவுடன் வாதாடிய முதல் திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார்தான்!
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடப் பயன்படுவது அந்த நாட்டு மக்கள் எந்த அளவிற்கு மனநிறைவுடன் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதைக் கொண்டுதான் முடியும். பலதரப்பட்ட இன மக்கள் யாவரும் அவரவருடைய மக்கள் தொகைக்கும், வரி கொடுக்கும் சக்திக்கும் தக்கபடி அவரவர்களுக்கு உரிய பங்கைப் பெற வேண்டும் என்று வற்புறுத்தி, காட்டமாக வாதாடிய முதல் திராவிடத் தலைவர் டாக்டர் நடேசனார்!
புரட்சிகரமான பேச்சுகளை அடிக்கடி சட்டமன்றத்தில் பேசி, எதிரிகளின் வாய்க்கு பூட்டுப் போட்ட மாமேதை டாக்டர் நடேசனார்!
அக்காலத்தில் நீதி இலாகா முழுவதும் பார்ப்பனர் மயமாகவே இருந்து வந்தது. பார்ப்பனரல்லாதாருக்கு உரிமையும், நீதியும் வழங்கி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தந்திரமாகப் பிசுபிசுக்கச் செய்வதில் பார்ப்பன நீதிபதிகள் தீவிரமாக ஈடுபட முடிந்தது. நீதித்துறையில் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, இராவ், பந்துலு என்று பல்வேறு வகுப்புப் பார்ப்பனர் இருந்தும், அவர்களின் இனநலம் பற்றிய பிரச்சினை எழும்போது, எல்லாரும் தங்கள் இன நலத்திற்காகவே சூழ்ச்சி புரிய ஒன்றுபட்டு செயலாற்றினர். இதனை எல்லாம் கவனித்து வேதனைப்பட்ட டாக்டர் நடேசனார் முடிவாக நான் கேட்டுக் கொள்வது இதுதான்:
பார்ப்பனரல்லாதாருக்கு அவர்களுக்கு உரிய உரிமையை அளிக்க மறுக்கும் உயர்நீதிமன்றத்திற்கான மானியத்தை எந்த அங்கத்தினரும் அனுமதிக்க வேண்டாம். பார்ப்பனரல்லாத சமூகத்தினரைக் காப்பாற்ற உறுதி கொள்ளுங்கள். பார்ப்பனரல்லாதார் வாழ வகை காணுங்கள் என்று பேசும் கட்டத்திற்கு வந்து விட்டது. என்ன துணிவு பாருங்கள்! என்ன இன உணர்வு பாருங்கள்! இப்படிப்பட்ட தலைவர் பாதையில் தொடர்ந்து எத்தனைத் தலைவர்களை நாம் காண முடிந்தது - முடிகிறது?
யார் இந்த பார்ப்பனர்கள்? இங்கு வந்தேறிய ஆரிய இனத்தவர்களே! உழைத்துப் பிழைக்கத் தெரியாமல், தர்ப்பைப் புல் ஏந்தி வாழ்ந்தவர்தானே. திராவிட மொழிகளைச் சூத்திர மொழிகள் என்றும், ஆங்கிலத்தை மிலேச்சர் மொழி என்று கூறிக் கொண்டு செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு இன்று வரை பாதுகாவலராக இருக்கும் துரோகக் கூட்டம் தானே. வேதப் பாடசாலைகளில் பயின்று வந்த இந்தப் பார்ப்பனர்கள், வெள்ளையன் ஆட்சி மலர்ந்ததும், ஆங்கிலம் எளிதில் கற்க முற்பட்டு அந்த மிலேச்சர்களிடமே வெட்கமின்றி அடிமை வாழ்வு வாழ்ந்த கூட்டம்தானே! படிப்படியாக பார்ப்பனரல்லாதாரும் ஆங்கிலம் கற்று இவர்களுடன் போட்டிக்கு வரும் நிலை ஏற்பட்டதும், தகுதியும், திறமையும் இல்லாதவர்கள் திராவிடர், பறையன், பள்ளன், அம்பட்டன், வண்ணான், குடியானவன் எல்லாம் ஆட்சி நடத்த இலாயக் கற்றவர்கள் என்று பல வகைகளில் வெள்ளை அதிகாரிகளை மயக்கி, பார்ப்பனரல்லாதாரின் முன்னேற்றத்திற்குத் தடை போட்டவர்கள்தானே பார்ப்பனர்கள். உண்மையைக் கூற வேண்டுமானால், ஆங்கிலப் பாதிரிமார்களின் சுயநலமற்ற தொண்டின் பயனாகத்தான் திராவிட மக்களும் ஆங்கிலம் பயில முடிந்தது.
கிறித்தவக் கல்வி அமைப்புகள் தோன்றிய பிறகுதான் திராவிட சமுதாயம் தலைதூக்க முடிந்தது. அந்தக் காலத்திலேயே கூட விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் புலவர்கள், பார்ப்பனர்களுக்குச் சாதகமாக, தமிழர் ஆங்கிலம் பயிலக் கூடாது. அதனால், அந்நிய மொழி ஆதிக்கம் தான் ஏற்படும் என்று அறியாமையால் எதிர்த்தும் எப்படியோ திராவிடரும் ஆங்கிலம் பயின்று அவர்களும் துபாஷ்களாகவும், வெள்ளையரிடம் பணியாற்றும் நிலை பெற்றனர்.
பார்ப்பனர்களுக்கும் - பார்ப்பனரல்லாதாருக்குமிடையே தோன்றிய பிரச்சினைக்கு வெள்ளையரே தீர்வு காண முற்பட்டனர்.
இதில் இருந்து இன்று நிலவும் பார்ப்பனர் ஆதிக்கம் எப்போதோ உருவாகி விட்டது என்பதை மதிப்பிடலாம்.
சமூகத்தில் நீதி நிலவவில்லை - பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் முன்னேறவோ, வாழவோ முடியவில்லை என்கிற உண்மையை நாட்டை ஆளும் வெள்ளையரே உணரும் கட்டம் அன்றே உருவாகி இருக்கிறது என்பதையும் நாம் அறிய முடிகிறது.
சமூக நீதிக்காகவோ, வகுப்பு நீதிக்காகவோ எந்த ஒரு பார்ப்பனரல்லாத அமைப்பும் இருந்திராத அந்தக் காலத்திலேயே, அதாவது 1854-ஆம் ஆண்டிலேயே வெள்ளையர் அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்ததிலிருந்து நாம் இதை அறிகிறோம்.
ஜில்லாக் கலெக்டர்கள் தங்கள் நிருவாகத்தின் கீழ் உள்ள ஆபீசுகளில், இருந்து வரும் கீழ் உத்தியோகங்களை செல்வாக்கு நிறைந்த சில குடும்பங் களால் மட்டுமே ஏகபோக உரிமை கொண்டாடும்படி விடக் கூடாது. ஜில்லா ஆபீசுகளில் ஏற்படும் உத்தியோகங்களை, ஜில்லாக்களில் வாழும் பல ஜாதி மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும்படி கலெக்டர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜில்லாவில் உள்ள தாசில்தார் பதவிகளில் ஒரு சராசரிப் பகுதி பார்ப்பனரல்லாத சாதியாருக்கும் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலெக்டர் ஆபீசில் இரண்டு முக்கியப் பதவிகள் வேறு வேறு ஜாதியினரால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது நிரந்தரமாக சட்டமாகக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை வெள்ளையர் அரசு பிறப்பித்திருக்கிறது. இது வரலாற்று உண்மை. நினைவில் கொள்ளவும். ஆனால், 1854ஆம் ஆண்டில் அப்போது டாக்டர் நடேசனாரோ, டாக்டர் நாயரோ, சர். தியாகராயரோ, பெரியாரோ, அண்ணாவோ அரசியலில் இல்லை.
திராவிடர் சங்கமோ, நீதிக்கட்சியோ, தி.க.வோ, தி.மு.க.வோ தோன்றவும் இல்லை. வகுப்புரிமை நீதிக்காக எந்தப் போராட்டமும் நடைபெறவும் இல்லை.
வெள்ளையரே முதன்முதலில் அனைத்துப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் மட்டுமே ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்த்து விட்டனர் என்பதைத் தாங்களே கண்டு நீதிக்கும், நியாயத்திற்கும் மதிப்பளித்து ஆட்சி நடத்திய ஆங்கிலேயர், அவர்களாகத் தருமத்தை நிலைநாட்டி பார்ப்பனரல்லாதாருக்கு நீதியை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மைசூர் சமஸ்தானத்தில் கூட மகாராஜா தன்னுடைய நிருவாகத்தில் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றிருப்பதைக் குறைத்திடவும், பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையை வளர விடாமல் தடுக்கவும், அனைத்து வகுப்பினர்களும் அரசுப் பணியை அடையச் சட்டங்களை நிறைவேற்றினார். இதுவும் நீதிக்கட்சி தோன்றிய காலக் கட்டத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவம் ஆகும்.
இந்தியாவில் முகமதியர்கள் ஆரம்பக் காலத்திலிருந்தே காங்கிரசு மகாசபை அக்கிரகார காங்கிரசு என்பதை உணர்ந்து தங்களின் சமூகத்திற்குத் தனியாக வகுப்பு உரிமை வேண்டும் என்று போராடினர். வெற்றியும் கண்டனர். இது நடந்தது 1909ஆம் ஆண்டு. மிண்டோ மார்லி சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் அடைந்தனர். இதற்குக் காங்கிரசு பலத்த எதிர்ப்பு காட்டியும் பயனற்றுப் போயிற்று.
இந்த வரலாற்று நடப்பு திராவிடத் தலைவர்களின் கண்களைத் திறந்து, டாக்டர் நடேசனாரின் திராவிடர் சங்கத்தில் இணைந்து திராவிடர்களுக்கென நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது.
1917-ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிட மாணவர்க்கு விருந்தளிப்பு விழாவை ஏற்பாடு செய்த டாக்டர் நடேசனார், அவ்விழாவிற்கு சட்டசபை நிருவாக மெம்பராக இருந்த கனம் அலெக்சாண்டர் கார்டியூ அவர்களைத் தலைமை தாங்க ஏற்பாடு செய்தார். அவரை டாக்டர் நாயர் முன்மொழிய, பனகல் அரசர் வழிமொழிய நடேசனார் வாழ்த்துச் செய்திகளை படித்தார்.
அலெக்சாண்டர் கார்டியூ திராவிட மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்றும் பட்டம் பெற்ற மாணவர்களைப் பாராட்டியும் பேசினார்.
வந்ததே பார்ப்பனர்களுக்குக் கோபம்? தலைகால் தெரியாமல் பேயாட்டம் ஆடினர். வகுப்புவாத விழாவில் அரசு அதிகாரி கலந்து கொள்வது தவறு என்று ஓலமிட்டனர். தேசிய இயக்கத்திற்கு அரசு மறைமுகமாக வேட்டு வைக்கிறது என்று நியூ இண்டியா ஏட்டில் வெளிப்படையாக பார்ப்பனர் எழுதினர்.
1914-ஆம் ஆண்டு இதே பார்ப்பனர்கள் காங்கிரசு மாநாட்டிற்கு வெள்ளையர் லார்டு பெண்ட்லண்ட்டை அழைத்து வந்தார்கள். தேசியப் பார்ப்பனர்கள் நின்று, இரு கரம் கூப்பி வரவேற்றனர். இது காங்கிரசு வரலாறு! பார்ப்பனர்களின் கூத்து! தேசியங்களின் திருவிளையாடல்!
வகுப்பு நீதி கேட்டுப் போராடுவது பார்ப்பனர்களுக்கு எதிரானதும் அல்ல. எல்லோருக்கும் சம நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அதன் உண்மையான நோக்கம். காலங்காலமாக உறங்கிக் கிடந்த திராவிடர் தொடையில் கயிறு திரித்துச் சுகபோகம் கண்டவர்கள், பிறருக்கு உரிய பங்கை பறித்து வளர்ந்து பழக்கப்பட்ட கொள்ளைக் கூட்டம் சம நீதிக்கு தடையாக இருப்பது, அதுவும் முன்னேறி வரும் சமத்துவ உலகில், கடைந்தெடுத்த வகுப்புவாதமேயாகும். பார்ப்பனர்கள் அகில இந்திய தேசியப் போர்வையில் காங்கிரசின் பெயரால் ஆடிய ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் திராவிடர் தலைவர் டாக்டர் சி.நடேசனார் ஆவார்.
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த 1920-ஆம் ஆண்டே வகுப்பு நீதிக்குத் தீவிரமாகக் குரல் கொடுத்து நீதிக்கட்சியை தடம் புரளாது சரியாகப் போகச் செய்தவர் டாக்டர் நடேசனார். பதவியில் இருந்த நீதிக்கட்சித் தலைவர்களில் சிலர் பார்ப்பனர்களை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளத் தயங்கியதையும் கண்டறிந்தார்.
5.8.1921-இல் சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய விகிதாசார உரிமை கிடைக்கும் வரையில் இனிமேல், அரசுப் பதவிகள் அனைத்தும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரமான தீர்மானத்தை டாக்டர் நடேசனார் கொண்டு வந்தார். இதைக் கண்டு நீதிக்கட்சியினர் கூட யோசிக்க ஆரம்பித்து விட்டனர். பின்னர் அத்தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் வேண்டுகோளுக்கு இசைந்து வாபஸ் பெற்றார். அவர் சிங்கம்; விட்டிருந்தால் சீறிப் பாய்ந்து ஆரிய ஆதிக்கத்தை அழித்து விட்டிருப்பார், அப்போதே! என்ன செய்வது? நீதிக்கட்சி தலைமையிலும், அரசுப் பதவிகளில் அமர்ந்து சுகம் கண்டவர்களும் கட்சிக் கட்டுப்பாட்டின் பேரால் அவரைப் பதுங்கிக் கிடங்கும் பூனையாக்கி விட்டனர்.
பின்னர் நீதிக்கட்சியின் தலைமை ஆலோசனை நடத்தி, அரசுக்குப் பரிந்துரைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனால் பதவியில் இருந்தவர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனரே தவிர, மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
தொடர்ந்து டாக்டர் நடேசனார் தீவிரமாகச் சிந்தித்து, அரசு தலைமைச் செயலகம் பார்ப்பனர்களின் ஏகபோகச் சொத்தாக இருப்பதை ஆதாரபூர்வமாக புள்ளி விவரங்களோடு சட்டமன்றத்தில் வெளிப்படுத்தி கோட்டையில் பணியாற்றும் பார்ப்பனர்களுக்கும், திராவிடர்களுக்கும் ஓரளவிற்காவது சமநிலை உண்டாக அடுத்த மூன்றாண்டுகள் பார்ப்பனரல்லாத சமூகத்தினர் மட்டுமே உத்தியோகங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எவ்வளவு பெரிய வெற்றியை டாக்டர் நடேசனார் நமக்கு அப்போதே தேடித் தந்தார் என்பதை நினைக்கும்போது அப்படிப்பட்ட உறுதி, துணிவு தொடர்ந்து எவரிடம் நாம் காண முடிகிறது? இது நடந்தது 1922-ஆம் ஆண்டில் என்பதை எண்ணிப் பாருங்கள், ஏதேதோ நினைவுகள் வரும். மொத்தத்தில் மக்கள் தொகையில் விகிதாசாரப்படி அனைத்துச் சமூகத்தினருக்கு தக்க முறையில் உத்தியோகங்கள் பகிர்ந்தளிக்கும் காலம் எப்போது பிறக்கும் என்று பெருமூச்சு விட வேண்டி வரும்.
அறநிலைய மசோதா!
இப்போது இந்த அறநிலையங்களைக் கண்காணிக்க ஒரு போர்டு உள்ளது. இது 70 ஆண்டுகளுக்கு முன் 1920-இல் நீதிக்கட்சி அமைச்சர் அவை ஏற்பட்டபோது, பனகல் அரசரால் ஏற்படுத்தப்பட்டது.
இது எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது பார்ப்பனரல்லாதாரின் கடமையாகும்.
கோயில்கள், மடங்கள், சத்திரங்கள் போன்ற அமைப்புகளில் பார்ப்பனர்கள் கூடாத, தகாத சீர்கேடுகளைச் செய்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்தச் சீர்கேடுகளை அகற்றி திருத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கம். சும்மா இருப்பார்களா கோயில் பெருச்சாளிகள்? சட்டமன்றத்தில் பார்ப்பனர் எல்லோரும் கதறினர்; கத்தினர்; சபிக்கவும் செய்தனர். திருவாளர் சத்தியமூர்த்தி அவாள் மொழியான சமஸ்கிருதத்திலேயே தொண்டை கிழியக் கத்தினார். கோயில் - மடங்களின் சொத்துகளும் பார்ப்பனர் பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும்; மத விஷயத்தில் அரசு தலையீடு கூடாது என்பதே பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கு மூலக் கருத்தாகும்.
டாக்டர் நடேசனார் எல்லாம் கவனித்து, சட்டமன்றத்தில் எதிரிகளின் வாதங்களுக்குப் பதிலளித்து, பகுத்தறிவுக் கருத்துகளை தன் வாதத்தில் மலரச் செய்து எதிர்ப்பை அடக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறநிலையங்களில் முடங்கிக் கிடக்கும் செல்வம் கைத்தொழில் வளர்ச்சிக்கு நல்ல முறையில் செலவிடுவதே இம்மசோதாவின் நோக்கம்.
செத்துப் போன சமஸ்கிருத மொழிக்காக, சொத்து தண்ணீராகச் செலவழிக்கப்படுவதால் யாருக்கு என்ன நன்மை? என்று கேட்டார்.
எல்லா மக்களுக்கும் கல்வி அறிவு புகட்டவும், சுகாதார வசதி, மருத்துவ வசதி, பிரசவ விடுதி, குழந்தைகள் பாதுகாப்பு விடுதி, இப்படிப் பல நற்காரியங்கள் செய்திடவே இம்மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனைப் பொதுமக்கள் எல்லோரும் விரும்பி வரவேற்றுப் பாராட்டுகின்றனர்.
இன்று நாட்டில் இராமகிருஷ்ணர் மடங்கள், கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான அமைப்புகள், கிறித்தவர்களின் பெயரால் நடைபெறும் தேவாலயங்கள் செய்திடும் தொண்டைப் பார்க்கிறோம். இவற்றின் வழியை நாம் பின்பற்ற வேண்டும்.
கோயிலுக்கும் - சாமிக்கும் செலவழிப்பதைவிட மக்களுக்கும் - மக்கள் முன்னேற்றத்திற்கும் செலவழிப்பதில் தவறு என்ன?
பாதிரிமார்களின் நல்வழியை நாம் ஏன் பின்பற்றக் கூடாது?
சாதி பேதம் காட்டாது, நாமும் ஏன் நல்லது செய்யக் கூடாது?
சேவை செய்வதில் மனிதனுக்கு மனிதன் ஏன் வேற்றுமை காணல் வேண்டும்?
உண்மையைக் கூற வேண்டுமானால் நம் சாத்திரங்களில் மதம் என்றோ, அதில் இந்து மதம் என்றோ அல்லது இந்து மக்கள் என்றோ எதையுமே, எங்கேயுமே காண முடியவில்லையே! இவை எல்லாம் வந்தேறியவைகளே!
மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள். 1922-ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சி பதவிக்கு வந்த இரண்டாம் ஆண்டிலேயே - சட்டமன்றத்திலேயே - பல வைதீக ஆத்திக சிகாமணிகள் முன்னிலையிலேயே, எப்படிப்பட்ட தீவிரப் பகுத்தறிவுக் கருத்துகளை டாக்டர் நடேசனார் முழங்கியிருக்கிறார்.
அப்போது அவருக்குப் பக்கபலமாக சுயமரியாதைச் சங்கமோ, பகுத்தறிவு இயக்கமோ தோன்றக்கூட இல்லை என்பதைக் கூர்மையான அறிவு படைத்தவர்கள் உணரக் கூடும்.
திராவிட சமூகத்திற்கு வாய்த்த ஓர் ஈடு, இணையற்ற பேராற்றல் மிக்க, அரிய தலைவர் டாக்டர் நடேச முதலியார் என்பதை நடுநிலை நின்று ஆய்பவர்கள் தயக்கமின்றித் தவறாது ஏற்பர்.
1912-ஆம் ஆண்டிலேயே முதன்முதல் திராவிடர் என்ற உண்மையான பெயரை நமக்கு வரலாற்று ரீதியாகக் கண்டு கொடுத்தவர் அவர்.
நம் சமுதாயம் ஒரு காலத்தில் உலகம் வியக்கும் அளவிற்கு தனி நாகரிகம், கலாச்சாரம், இலக்கியம் பெற்றது என்பதை முதன்முதல் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தியவர் அவர்!
1912-ஆம் ஆண்டிலேயே ஓர் இனம், ஒரு நாடு முன்னேற கல்விதான் அடிப்படை என்பதைக் கண்டறிந்து நம் இனத்திற்காக திராவிடர் இல்லம் அமைத்தவர் அவர்! நம் இனத்திற்கு என்று ஓர் அமைப்பு இருந்தால் தான் நம் இனம் முன்னேற முடியும் என்று கண்டறிந்து திராவிடர் சங்கம் அமைத்தவர் அவர்!
1912-ஆம் ஆண்டிலேயே நம் இனத்திற்காகத் தன் வாழ்நாளை, நமக்காகத் தியாகம் செய்து, தன் வாழ்நாள் முழுவதும் தீவிரமாகக் கிளர்ச்சி செய்த ஒப்பற்ற - தன்னலமற்ற தலைவராக வாழ்ந்து காட்டியவர் அவர்!
1912-ஆம் ஆண்டிலேயே பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போர்தொடுத்த மாவீரன் அவர்!
1912-ஆம் ஆண்டிலேயே திராவிட சமுதாயத்தின் அடிமை விலங்கை உடைத்தெறியக் குரல் கொடுத்தவர் அவர்!
1912-ஆம் ஆண்டிலேயே பார்ப்பனர்களுக்கு எதிராக அறப்போர் தொடங்கியவர் அவர்.
1912-ஆம் ஆண்டிலேயே சீர்திருத்த உலகம் தோன்ற வித்திட்டவர் அவர்.
1912-ஆம் ஆண்டிலேயே திராவிடர் மறுமலர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவர். தேசியவாதிகளாக, திசை தடுமாறி பிளவுபட்டுக் கிடந்த ஆற்றல்மிக்க திராவிடர் தலைவர்களை ஒன்று சேர்த்த தலைவர் அவர்.
திராவிடத்தின் தந்தை என்று போற்றத்தக்க அனைத்துத் தகுதிகளையும் முதன்முதலில் பெற்றிருந்தவர் டாக்டர் நடேசனார் என்றால் அது மிகையாகாது.
திராவிட இனத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது என்று வாழ்நாள் முழுவதும் விழிப்புடன் பாதுகாத்த பெரியார், நம்மைப் பாதுகாத்த பெருந்தகை, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் 1937-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள் இயற்கையெய்தினார். பிறரைக் காப்பாற்றிக் காப்பாற்றிச் சோர்வு கண்டு விட்டாரோ என்னவோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விட்டார், தன் 62-ஆம் வயதில்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, பின் தள்ளப்பட்ட, நலிந்த மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்ட உத்தமர் கண்கள் மூடிவிட்டன.
நமக்காகவே பேசிப் பேசி எதிரிகளின் வாயை அடைத்த மாமேதையின் வாய் மூடிவிட்டது.
அக்கிரகாரத்தை நோக்கிக் குறி தப்பாமல் குண்டு வீசிய அவரது நாக்கு எழாமல் நிரந்தர ஓய்வு பெற்று கொண்டு விட்டது!
சமுதாயம் ஒரு நல்ல சமூக சேவகரை இழந்து விட்டது. நகரத் தந்தை நம்மை வீட்டு நீங்கி விட்டார் என்று பார்ப்பனரல்லாதாரின் எதிரியான இந்து நாளேடு கூட தன் வருத்ததைத் தெரிவித்துக் கொண்டது.
நீதிக்கட்சியின் தராசுக் கொடியுடன் சுமார் மூன்று மைல் நீளம் அவரது இறுதி ஊர்வலத்தில் ஏழைகள், தொழிலாளர், தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், இந்துக்கள், பல்வேறு கட்சியினர் பங்கு கொண்டனர்.
பார்ப்பனரல்லாதாருக்குப் பொற்காலம் பிறக்க வேண்டுமென்று, தான் கொண்ட ஒரே இலட்சியத்திற்காக வாழ்நாள் முழுக்க வாழ்ந்து காட்டிய தலைவனை, இல்லை, நல்ல தொண்டனை நாம் இழந்து விட்டோம்.
தனக்கு எது நேர்ந்தாலும் கவலைப்படாமல், எந்த நேரத்திலும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காமல், தீவிரவாதியாக வாழ்ந்து காட்டிய உத்தமனை இழந்து விட்டோம்.
அடைந்திருக்க வேண்டிய பெரிய பதவிகள் எவற்றின் மீதும் குறியாக இருக்காமல், கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டிய உத்தமனை இழந்து விட்டோம். பணம் பணம் என்று அலையும் பொதுவாழ்க்கை உலகில் தன் செல்வத்தையே மக்களுக்காகச் செலவிட்ட பண்பாளனை நாம் இழந்து விட்டோம்.
புகழைத் தேடி ஏதேதோ செய்து கொள்ளும் இப்பொல்லாத உலகத்தில், தன் விளம்பரத்திற்காக ஏதும் செய்து கொள்ள நாட்டமோ, நேரமோ கிடைக்காத அளவிற்கு உயர்ந்த வாழ்வு வாழ்ந்து காட்டிய மாமேதையை நாம் இழந்து விட்டோம்.
இன்று திராவிடர் இருக்கும் நிலையை நாம் கண்டு வருகிறோம். நம்மிடையே டாக்டர் நடேசனார் இல்லை! நமக்கென்று ஓர் ஆயிரம் நடேசனார்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குவது தவறா? நாம் அவருக்கு என்ன நினைவு கூரமுடியும்?
அவருடைய நீதிக்கட்சிக்குப் பவள விழா. அதன் நினைவாக இச்சிறுநூல் என் அன்புக் காணிக்கையாகப் படைக்கிறேன்.
எப்படியோ வீழ்ந்த திராவிடர் சமுதாயம் எழட்டும்! வாழட்டும்! எல்லோருக்கும் நீதி கிடைக்கட்டும்!
நூல் - திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார்
ஆசிரியர் - ஏ.எஸ்.வேணு
Comments
Post a Comment