திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார் - பகுதி - 1
வாழ்நாள் முழுவதும், உயர்ந்த இலட்சியத்துடன், வாழ்ந்தவர்கள், தன்னலம் பற்றிப் பெரிதும் சிந்திக்காதவர்கள் என்பதை உலக வரலாறு புகட்டும் உண்மையாகும்.
தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ கடுகளவும் சிந்திக்காதவர்கள்தான் உலகைத் திருத்திய உத்தமர்களாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.
உலகம் போற்றும் உத்தமர்கள் பிறந்ததே ஊருக்கு உழைக்கத்தான்; உலகத்தின் முன்னேற்றத்திற்காகத்தான்; எல்லோரும் இன்புற்று வாழத்தான் என்பதை நமக்கு உலக வரலாறு புகட்டுகிறது.
ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும், தாழ்த்தப்பட்டும், பின்தள்ளப்பட்டும், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டும், ஏளனத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டு அவதியுற்ற மக்களைத் தலைநிமிரச் செய்து, புது வாழ்வைப் பூரிப்புடன் நடத்திட வழிகாட்டிய உத்தமர்கள் எவருமே நிம்மதியுடனோ, தொல்லையின்றியோ வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
அப்படிப்பட்டவர்கள் துன்பத்தையே தொடர்ந்து வாழ்க்கையில் அனுபவித் துள்ளனர்!
அவர்கள் வாழத் தெரியாதவர்களும் அல்லர். இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வைப் பாழாக்கிக் கொண்டவர்கள் என்றுதான் கூறவேண்டும். எப்படியும் வாழலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால், அவர்கள் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்ந்திருக்க முடியும்.
உலகம் இயங்குவதற்கு அடிப்படை பணம்தான் என்று கண்டறிந்த உடனே, காரல் மார்க்ஸ் தன்னலம் கொண்டு வாழ்ந்திருந்தால், இன்று உலக நாடுகளில் ஒன்றுகூட இல்லாமை, கல்லாமை, ஏழ்மை அகன்ற சமதர்மப் பூங்காவாக மலர்ந்திருக்கவே முடியாது.
கொடுங்கோல் புரிந்த மன்னர்கள் மக்களைக் கொடுமைப்படுத்தினால் நமக்கென்ன - மதகுருக்கள் மக்களைச் சுரண்டினால் நமக்கென்ன என்று லெனின் நினைத்திருந்தால், சோவியத் ருசியா ஒரு பொது உடைமைப் பூங்காவாக மலர்ந்திருக்க முடியுமா?
நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதோர் சமுதாயம் உருவாகப் பாடுபட்ட சாக்ரடீஸ் கதி என்ன? விஷக்கோப்பை!
எது கடவுள்? யார் கடவுள்? அவனால் மக்கள் அடையும் நன்மை என்ன? இதையெல்லாம் துணிந்து கேட்ட புரூனோ கதி என்ன? தீயில் கருகிச் சாம்பலானான்!
ரூசோ, வால்டேர், இங்கர்சால் இப்படி எத்தனையோ பேர், குடும்பத்தை மறந்து மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்று பாடுபட்டனர். அவர்கள் தங்களைப்பற்றியோ, தங்கள் குடும்பத்தைப்பற்றியோ அக்கறை கொண்டிருந்தால், நன்றாக வாழ்ந்திருக்க முடியும்.
பிறருக்காகவே வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு, தொல்லைகளையும், துன்பத்தையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் புரிந்த தியாகத்தின் பயனாகத் தானே இன்று உலகம் ஓரளவிற்கு முன்னேற்றப் பாதையில் நடைபோட முடிகிறது.
அந்தப் பட்டியலில் இடம் பெறத்தக்க தியாகிகளை நம் தாயகம் - தமிழ்நாடு பெற்றுள்ளது என்பதை நம்மவர் பலர் அறியவில்லை. அது அவர்கள் குற்றமல்ல. சுய விளம்பரத்தை அவர்கள் நாடவில்லை. சுயசரிதை அவர்கள் படைக்கவும் இல்லை. அதற்கான நேரமும் அவசியமும் ஏற்படவில்லை.
என் கடன் பணி செய்வதே என்று கடமையை முடித்த உத்தமர்கள் அவர்கள். அவர்கள் புரிந்த தியாகத்தின் விளைவாக இன்று நம் சமுதாயம், படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகிறது என்பதை நம்மில் ஒரு சிலர் கண்டறிய முடிகிறது.
வாழ்ந்த தமிழினம் வீழ்த்தப்பட்டு விட்டது. உலகமே வியக்கத்தக்க வரலாறு படைத்த தமிழன் தன் தாய் நாட்டிலேயே அடிமையாக்கப்பட்டான். வாழ்வு இழந்தான், உரிமைகளை இழந்தான், தன் கலாசாரத்தைப் பறிகொடுத்தான். வந்தேறிகளின் நாகரிகத்திற்கு அடிமையானான். தன் தாய்மொழி அழிவதை தானே கண்டும் வாளாயிருந்து விட்டான்.
சுரண்டப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும், நாதியற்றும், நலிந்தும், பின்தள்ளப்பட்டும், அக்கிரமக்காரர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்டும், மதத்தின் பெயரால் மானம், மரியாதையை இழந்தும், ஏதும் செய்ய முடியாத நிலையில் பல நூற்றாண்டுகள் துடித்தும், துவண்டும், தவித்தும், துன்பமும், துயரமுமே தன் தலை எழுத்து என்று அல்லலுக்கு ஆளாக்கப்பட்ட தமிழர் சமுதாயம், மீண்டும் புதுவாழ்வு பெற்று தலை நிமிர்ந்து, ஓரளவிற்குப் படிப்படியாக முன்னேற முடிகிறது என்றால், அதற்குக் காரணம் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியைச் தோற்றுவித்த டாக்டர் சி. நடேசனார், சர்.பி.டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி.டி.இராசன், ஆர்க்காடு இரட்டையர் சர்.ஏ.ஆர். முதலியார், சர்.ஏ.எல். முதலியார், சர்.முகமது உஸ்மான், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.இராஜா, மீனாம்பாள் சிவராஜ், பொப்பிலி அரசர், சர்.ஆர்.கே.சண்முகம், சர்.எஸ்.முத்தையா முதலியார் போன்ற நூற்றுக்கணக்கான நீதிக்கட்சித் தலைவர்கள்தாம் என்பதை நல்லோர், கற்றோர், விஷயமறிந்தவர் நிச்சயம் அறிவர்.
குறிப்பாக டாக்டர் சி. நடேசனார் மட்டும் பிறவாதிருந்தால், நாம் இன்று பெருமையுடன் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளும் வாய்ப்பே கூட ஏற்பட்டிருக்காது. 1912-ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் நம் மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக திராவிடர் இல்லம் (னுசயஎனையை ழடிஅந) அமைத்து நம்மவர்கள் தங்கவும், வசதிகளைப் பெறவும், நன்றாகப் படிக்கவும் உதவி புரிந்தவர் டாக்டர் சி. நடேசனார்தான். அந்தக் காலத்தில் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து படிக்கும் பார்ப்பனர்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. நம்முடைய மாணவர்கள்தான் தங்குவதற்கு இடமோ, உணவோ வழியில்லாமல் திண்டாடினர். எப்படியோ நாடாண்ட நாயகர்களை வஞ்சித்து, அரசு செலவில் வசதிகளைப் பெற்று, வேதப் பாடசாலைகளை ஏற்படுத்திக் கொண்டு கல்வி பயிலும் வாய்ப்பை உண்டாக்கிக் கொண்டே வந்தேறிகள், ஆட்சியில் யார் இருந்தாலும் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பைத் தொடர்ந்து நிலையாகப் பெற்று வந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் படிக்கவும் கூடாது. ஓதுவதைக் கேட்கவும் கூடாது என்ற மனுநீதிச் சட்டம் அவர்களுக்குத் துணையாக, பாதுகாப்பு கேடயமாக அமைந்து விட்டது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பார்ப்பனன். அவன் இரு பிறவி (துவிஜா) அவனுக்கு மட்டுமே பூணூல் அணியும் உரிமை உண்டு. மற்றவர் எல்லாம் பிரம்மாவின் தோளிலும், தொடையிலும், பாதத்திலும் பிறந்தவர் என்றே மக்கள் நம்பினர்.
பிரம்மா ஆணா, பெண்ணா? அதெப்படி பிரம்மாவிற்கு உடல் முழுவதும் குழந்தை பிறக்கும்? இதைப் பற்றி எவருமே சிந்திக்கவில்லை. கேள்வி எழுப்பவும் இல்லை. இப்போது உள்ள பார்ப்பனர்கள் எங்கே பிறக்கிறார்கள், எப்படிப் பிறக்கிறார்கள் என்பதைப் பார்த்த பின்னரும் கூட, பார்ப்பனர்களை உயர் சாதியினர் என்று மற்றவர்கள் நம்பும் நிலைதானே உள்ளது. இந்தியத் துணைக் கண்டம் விடுதலை பெற்ற பின்னரும் கூட இந்துச் சட்டம் தானே அரசின் ஆதரவைப் பெற்று விளங்குகிறது. அரசமைப்புச் சட்டப்படி இந்துக்களில் இரு பிரிவுகளையே நீதிமன்றம் ஏற்கிறது. ஒன்று - பார்ப்பனர், மற்றவர் - எல்லோரும் சூத்திரர்கள். முஸ்லிம்களுக்கு வேறு சட்டம், கிறித்தவர்களுக்கு வேறு சட்டம். இருந்தும் எல்லோரும் இந்தியர்கள், சமநிலை பெற்றவர்கள், சம அந்தஸ்து பெற்றவர்கள் என்று பாமர மக்கள் நம்பும் நிலைதானே நீடிக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 100-க்கு 97 பேரான மண்ணின் மைந்தர்கள் அவதிக்குள்ளாகித் தவித்தபோதுதான், டாக்டர் நடேசனார், நாமெல்லாம் திராவிடர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார். முதன்முதலில் சென்னை ஒற்றுமைக் கழகம் (ஆயனசயள ருவைநன டுநயபரந) என்ற அமைப்பைத் தானே முன்னின்று அமைத்தார். பின்னர் அதனை திராவிடர் சங்கம் (னுசயஎனையை ஹளளடிஉயைவடி) என்று துணிந்து பெயர் மாற்றம் செய்தார். ஆண்டுதோறும் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேறிப் பட்டம் பெற்ற பார்ப்பனரல்லாத பட்டதாரிகளைக் கூட்டி, விருந்தும் பாராட்டும் வழங்கி, அப்போதே இன உணர்வை ஊட்ட முற்பட்டார்.
சர்.பிட்டி. தியாகராயரும், டாக்டர் நாயரும் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்து உண்மையாகப் பாடுபட்டு வந்த காலகட்டத்தில் இருவருமே, காங்கிரசு பார்ப்பனரின் நலத்திற்காகப் பாடுபடும் அமைப்பு என்ற உண்மையை உணர்ந்து வெளியேறினர்.
ஆனால், பொதுத்தொண்டில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம் குறையவில்லை. நகரில் பல பெரிய அமைப்புகளில் இருவரும் பல ஆண்டுகாலம் உழைத்து மக்களின் அன்பைப் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். சென்னை நகர சபையில் இருவருமே நல்ல திட்டங்களைத் தீட்டி அமலுக்குக் கொண்டு வந்தார்கள். இருந்தும் அவர்கள் இருவருக்கும் இடையே பூசல் இருந்து வந்தது.
இதையெல்லாம் கவனித்து வந்த டாக்டர் நடேசனார் திராவிட இன நலம் மேலும் பாதிக்கப்படக் கூடாதே என்ற வேதனை கொண்டு இருவரையும் எப்படியாகிலும் இணைத்து, இருவரின் ஆற்றலையும் திராவிட இன நலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார். இருவரையும், பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகளைப் பாராட்டும் விழாவில் கலந்து கொள்ளச் செய்தார்.
டாக்டர் சி. நடேசனாரின் இந்த முயற்சியின் பயனாக, திராவிடர் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திராவிடர் இல்லத்திற்கு கிழமைதோறும் பேராசிரியர் சு. வெங்கடரத்தினம், திரு.வி.க. போன்ற அறிவாளிகளை அழைத்துப் பேச வைத்தார்.
இந்த இல்லம், சென்னை - திருவல்லிக்கேணியில் டாக்டர் சி. நடேசனார் இல்லத்தின் எதிரிலேயே இயங்கியது.
இத்தனைக்கும், அவர் எவரிடமும் கையேந்திப் பணம் கேட்டதில்லை. எல்லாச் செலவுகளையும் அவரே ஏற்றார். அப்படியே அவர் மற்றவர்களிடம் கையேந்தி இருந்தால், அந்தக் காலத்தில் யார்தான் உதவியிருக்க முடியும்? தன்னைப் பற்றி, தன் தாயகத்தைப்பற்றி, தன் இனத்தைப்பற்றி, முதன்முதலில் சிந்தித்தவர். அவர், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் உறவினர் உண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தான் பிறந்தது தனக்காக அல்ல; பிறர் நலனுக்காக என்று முதன்முதலில் நினைத்த திராவிடத் தலைவர் நடேசனார். அவர்தான் நம் திராவிடர் இயக்கத்தின் வித்து என்பதைப் பெரும்பாலோர் இன்று உணர்ந்திடும் நிலை இல்லை. இன்று திராவிடர் பெற்றிருக்கும் முன்னேற்றத்திற்கு அவர்தான் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்பது இன்றைக்குப் பலர் அறிய முடியவில்லை. அந்த அளவுக்கு அவருடைய தன்னலமற்ற சேவை வரலாற்றில் இடம் பெறாது போயிற்று.
அவரும் தன் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, விளம்பரத் திற்காகவோ ஏதாவது செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமலே தியாக வாழ்வு வாழ்ந்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார். திராவிடர்களுக்கு என்று ஓர் அமைப்பை உண்டாக்கி, திராவிடர்களுக்கு விழிப்பு உணர்வினை ஏற்படுத்தி ஆரியர்களுக்கு எதிராக அமைதிப் புரட்சியை உண்டாக்கியவர் டாக்டர் சி. நடேசனார். நீதிக்கட்சி தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர் அவர். பல நூற்றாண்டு காலமாக வந்தேறிகள் வஞ்சகம், சூது, தந்திரம் புரிந்து தங்களின் வாழ்வில் பொலிவையும் முன்னேற்றத்தையும் வளர்த்துக் கொண்டே வந்த அடாத செயலுக்கு முதன்முதலில் முற்றுப்புள்ளி வைத்தவர் டாக்டர் சி. நடேசனார்.
இன்று திராவிடர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி, பல பதவிகளைப் பெற்று, பொலிவுடன் வாழ்வதற்கு வழி வகுத்தவர் அவர்.
திராவிட மாணவர்கள் கல்வி பயில வசதிகளை உண்டாக்கியவர் அவர்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், நடேசனாரை மனிதருள் மாணிக்கம் என்று மனம் திறந்து புகழ்ந்திருக்கிறார் என்றால், நடேசனார் எந்த அளவிற்கு அற்புதமாக மக்களுக்குச் சேவை செய்திருக்க வேண்டும் என்பதை நாம் அறிய முடியும்.
சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகே சின்னகாவனம் என்ற சிற்றூரில்தான் டாக்டர் நடேசனாரின் முன்னோர் வாழ்ந்தனர். அவர்கள் சென்னைக்குக் குடியேறி, திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் குடியிருந்தனர். அவருடைய தந்தை திரு. கிருஷ்ணசாமி முதலியார் ஆவார். அவர் பொன்னேரி முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். டாக்டர் நடேசனார் 1875-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவருடைய சிறிய தகப்பனாரின் புதல்வர்தான் புகழ்பெற்ற, திவான்பகதூர் சி.தாதுலிங்க முதலியார். அவர் 1942-43-ஆம் ஆண்டில் நகரசபை மேயராகவும் பதவி வகித்தவர் ஆவார்.
டாக்டர் நடேசனார் இளமைப் பருவத்தில் திண்ணைப் பள்ளியில்தான் கல்வி கற்கச் சேர்க்கப்பட்டார். அந்தப் பள்ளி தெலுங்கு மொழியில்தான் பாடங்களைப் பயிற்றுவித்தது. அதனால் அவர் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் தெலுங்கு மொழியை விருப்பப் பாடமாகக் கற்க வேண்டியதாயிற்று. சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, டு.ஆ.ளு., பட்டத்தைப் பெற்று தொழில் நடத்த முற்பட்டார்.
அந்தக் காலத்தில் அவர் நகரத்தில் பெரிய மருத்துவர். எப்படிப்பட்ட வியாதிக்கும் நல்ல மருந்து கொடுத்து, அன்பாகக் கவனித்து மக்களிடம் பேரும், புகழும் பெற்றார். இருந்தும் என்ன? அவர் பணத்தின் மீது குறிக்கோள் கொள்ளவில்லை.
ஏழைகளுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் அவரே தன் பணத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கித் தந்து மனித இதயம் படைத்த டாக்டராக விளங்கினார்.
வறுமையாலும், பிணியாலும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களைக் கவனித்த பிறகு தான், பணக்காரர்களைக் கவனிப்பது அவர் கடைபிடித்த பழக்கமாகும். அவர் மருத்துவத் தொழில் செய்ய முற்படுவதற்கு முன், பித்தாபுரம் மகாராஜா கல்லூரியில் விரிவுரையாளராகக் குறுகிய காலம் பணியாற்றினார். நல்ல ஆங்கிலப் புலமை பெற்ற விரிவுரையாளர் என்ற பெயரையும் பெற்றார். அப்படியே அவர் அத்தொழிலில் நீடித்திருந்தால் நீதிக்கட்சியும் தோன்றியிருக்காது , திராவிடர் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்றே கூற வேண்டும். ஆசிரியர் பணியும் சிறந்ததுதான். ஆனால், அவருடைய ஆற்றலுக்கும், அறிவிற்கும், நாட்டுப் பற்றுக்கும் அது பொருத்தமானதல்ல, பிறரிடம் அன்பு செலுத்தும் பண்பும், ஆதரவளிக்கும் குணமும் அவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. எவரிடமும் தோழமை கொண்டாடிப் பழகும் உயர்ந்த குணம் பெற்றிருந்தார். பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் எது பேசினாலும் அமைதியுடன் கேட்டுக் கொள்ளும் நற்பண்பு அவரிடம் குடிகொண்டு விட்டது.
சென்னை நகரில் வாழ்ந்து வந்த ஏழைகள், சேரிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் குறிப்பாக - மீனவர்கள், தொழிலாளர்கள் அவரைக் கண்கண்ட தெய்வம் என்றே மதித்து வணங்கி வந்தனர். சிபாரிசுக் கடிதங்களைக் கேட்டவுடன் வழங்கியவர் அவர். தன்னுடைய தொலைப்பேசியை எல்லாருக்கும் பொதுவுடைமையாக்கியவர்!
தான் பிறந்த திராவிடர் சமுதாயத்தின், அன்றைய அரசியல், சமூக, பொருளாதார நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருப்பதை அவர்தான் முதலில் கண்டார். எப்படியும் தன் இன நலனுக்காக அனைத்தும் செய்திட வேண்டும் என்று முதன்முதலில் எண்ணியவர் அவர். திராவிட மக்களின் எதிர்கால நல்வாழ்விற்கு வழிகோலும் முறையில் திராவிடர் இல்லம், திராவிடர் சங்கம் (னுசயஎனையை ஹளளடிஉயைவடி) அமைத்தார். பார்ப்பனர்களுக்கு எதிராக, திராவிடர்களின் பாதுகாப்பு அறக்கூடமாக முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளே பிற்காலத்தில் நீதிக்கட்சி தோன்றவும், திராவிடர் இயக்கம் உறுதியாக வேர் விட்டு, ஆல் போல் வளரவும் அடிப்படைக் காரணமாகி இருப்பதை நம்மால் இப்போது அறிய முடிகிறது.
திரு.வி.க. அவர்கள் தனது வாழ்க்கைக் குறிப்பு நூலில் நடேசனாரின் முயற்சியைப் பாராட்டி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
1912ஆம் ஆண்டு திராவிடர் சங்கத்தின் மூலமே தனக்கும், டாக்டர் நடேசனாருக்கும் நட்பு உண்டாகியது என்றும், சங்கத்தின் சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடைபெற்றது என்றும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பொது உடைமை, அறிவியல் குறித்தும், எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை ஜோதிடம், கணிதம் முதலிய பொருள்கள் குறித்தும், திரு.வி.க. தமிழ் இலக்கியம் பற்றியும் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆந்திரச் சகோதரர்கள் எக்கட்சியில் இருப்பினும், ஒன்று கூடித் தெலுங்கர் நலம் பேண அந்தக் காலத்தில் சர்.பிட்டி.தியாகராய செட்டியார் அவர்களின் முயற்சியால் ஆந்திர மகாசபை நிறுவப்பட்டது போன்று, தமிழர் நலம் காக்க டாக்டர் நடேசனார் திராவிடர் சங்கம் தொடங்கி, தமிழர் நலம்பற்றி மட்டுமல்லாது திராவிட மொழிகளைப் பேசும் அனைவரின் நலனையும் பாதுகாத்திட முனைந்தார் என்பது நமக்குப் பூரிப்பும், பெருமதிப்பும் தருகிறதல்லவா? திராவிடர் இனத்தவர் எல்லோரையும் ஒரே குடும்பமாக எண்ணிய முதல் தமிழன் டாக்டர் நடேசனார்!
ஆண்டுதோறும் விழா எடுத்து, பட்டதாரிகளை விருந்துக்கு அழைத்து, அவர்களுக்குத் திராவிட இன உணர்ச்சியையும், வீரத்தையும் ஊட்டியவர் டாக்டர் நடேசனார்!
1914-ஆம் ஆண்டு முதல் உலகப் போர் மூண்டது. அதில் பிரிட்டிஷ் அரசு பங்கு கொள்ள வேண்டியதாயிற்று. போர் 1918-ஆம் ஆண்டு முடிந்து பிரிட்டிஷ் அரசுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அப்போரில் ஆள் பலத்தையும், நிதி உதவியையும் செய்தவர் பார்ப்பனரல்லாதார். பார்ப்பனர்கள் வெள்ளையரை மிலேச்சர் என்றும், அவர்களின் ஆங்கில மொழியை மிலேச்ச பாஷை என்றும் தான் முதலில் கூறி வந்தனர். பின்னர் அவர்களே ஆங்கிலத்தை எளிதில் முதன் முதலாகப் பயின்று பதவிகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகப்படியாகப் பெறலாயினர். வேதம் ஓதுதலையும், ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் படிப்படியாக அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையைப் பெற்றனர்.
உலகப் போரில் ஒத்துழைப்பு தந்த இந்தியர்களுக்குக் கைமாறாக அரசு நிருவாகத்தில் மேலும் அதிகமாகப் பங்கு தர வெள்ளையர் ஆட்சி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்தது. அந்த அறிவிப்பு இந்திய அரசின் தனிக் கெஜட்டில் வெளியிடப்பட்டது.
வெள்ளையர்கள் முழுக்க முழுக்க அதிகாரப் பொறுப்பைத் தங்கள் வசம் கொண்டிருந்த காலத்திலேயே பார்ப்பனர்கள் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்றிருந்தனர் என்றால், இந்தியர்களிடம் மேலும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படுமானால், பார்ப்பனரல்லாதாரின் நிலை என்னவாகும் என்பதை டாக்டர் நடேசனார் சிந்தித்தார்.
அதுமட்டுமல்ல, அதுவரை வெள்ளையர் ஹும் துரையால் தொடங்கப்பட்ட காங்கிரசு மகாசபையில் பார்ப்பனர்கள் செல்வாக்குப் பெற்று, காங்கிரசு என்றால் அது பார்ப்பனர் நலம் பெருக்கும் அமைப்பாக வலுப்பெற்று வரத் தொடங்கியது.
சர். பிட்டி. தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் காங்கிரசில் பெற்ற பாடமும் அதுவே.
எனவே, உலகப் போருக்குப் பிறகு, அதன் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த பார்ப்பனரல்லாதாரின் எதிர்காலம் இருண்டு விடும் என்பதை அவர்களும் உணரத் தொடங்கினர்.
திராவிடத் தலைவர்கள் தாங்கள் பெற்ற அனுபவ முதிர்ச்சியின் காரணமாக, திராவிடரின் எதிர்காலம் பற்றி அச்சமுற்று, எப்படியும் பார்ப்பனரல்லாத மக்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கத்துடன் சிந்திக்கலானார்கள். அதற்குத் தன்னால் இயன்ற முழு முயற்சியைக் கொண்டு, தியாகராயரையும், டாக்டர் நாயரையும் இணைத்து திராவிடர்களுக்காக 20.11.1916-இல் ஏற்படுத்திய அமைப்பே தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சியாகும். ஏகபோக உரிமையுடன், எதிலும் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்கள் நீதிக்கட்சியின் எழுச்சியைக் கண்டு அஞ்சினர், திகைப்பு அடைந்தனர்.
நீதிக்கட்சியானது உத்தியோக வேட்டைக் கட்சி!
வகுப்புவாதக் கட்சி!
வெள்ளையருக்கு வால்பிடிக்கும் கட்சி!
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் கட்சி!
தேச விரோதக் கட்சி!
இப்படி எல்லாம் இட்டுக் கட்டிப் பழி சுமத்திப் பிரச்சாரம் செய்ய முற்பட்டனர் பார்ப்பனர்கள். அவர்கள் வசமே தின ஏடுகளும் இருந்தன. திராவிட இனத்தவரே கூட பார்ப்பனர்களின் தேசிய மாய வலையில் சிக்குண்டு, அவதூறும் கேலியும் பேசி வந்தனர். சென்னை மாகாணச் சங்கம் என்ற ஓர் அமைப்பைப் பார்ப்பனர்கள் உருவாக்கி, திரு. கேசவப் பிள்ளை, பெரியார், திரு.வி.க. போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்களை அந்தப் போலி அமைப்பில் சிக்க வைத்து நீதிக்கட்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கனவு கண்டனர்.
டாக்டர் நடேசனார் தென்னகம் முழுவதும் நடைபெற்ற பார்ப்பனரல்லாத மாநாடுகளில் முக்கியப் பங்கேற்று, பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி, எதிரிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பார்ப்பனர் அல்லாத மக்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினார். எதிரிகளின் குற்றச்சாட்டுகளைத் தூள் தூளாக்கி உண்மையை மக்களுக்குப் புரிய வைத்தார். திராவிடர்களிடையே எழுச்சியும், புத்துணர்ச்சியும், ஊக்கமும், இன உணர்வும் உண்டாக்க அரும்பாடுபட்டார் டாக்டர் நடேசனார்.
திராவிடர்களின் உண்மை நிலையை உலகறியச் செய்த உத்தமர் அவர்!
நீதிக்கட்சியை ஆரம்பத்திலேயே அழித்துவிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் தீட்டிய திட்டங்களைத் தகர்த்து எறிந்தவர் அவர்!
காங்கிரசின் மறைமுக ஆதரவோடும், பார்ப்பனர்களின் முழு ஆதரவுடனும் உருவாக்கப்பட்ட சுயராஜ்யக் கட்சியும், அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் கட்சியும் கொண்ட கோலமும், ஆடிய ஆட்டமும் தோல்வியடையச் செய்தவர் அவர்! அன்னிபெசன்ட் அம்மையாரின் இண்டியன் பேட்ரியட், நியூ இண்டியா ஏடுகள் நீதிக்கட்சியைத் தாக்கியும், பார்ப்பனர்களை ஆரிய இனத்தவர், ஆரிய தர்மத்தினர் என்று புகழ்ந்தும் எழுதின. பார்ப்பனர்களைக் கண்டு அகமகிழ்ந்த அம்மையார் திராவிடர் தலைவர்களைக் கண்ணால் காணக் கூட வெறுத்தார்.
இந்தியச் சீர்திருத்தச் சட்டத்தைப்பற்றி இந்தியர்களின் கருத்தை அறிய ஆங்கிலேய ஆட்சி விரும்பியது. பார்ப்பனரல்லாதார் சார்பாகப் பல தலைவர்கள், பல குழுக்களாகப் பிரிந்து, அந்தச் சட்டத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு என்று தனியாகத் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால், 100-க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களே ஆட்சியைக் கைப்பற்றும் நிலை ஏற்படும் என்பதை வெள்ளையரிடம் வலியுறுத்தினர். அப்போது சிறந்த அறிவாளிகளாக விளங்கிய டாக்டர் நாயர், தியாகராயர், ஏ. இராமசாமி முதலியார், டாக்டர் சி. நடேசனார், ஓ.தணிகாசலம் செட்டி ஆகியோர் கடுமையாக உழைத்து, புள்ளி விவரங்களைச் சேகரித்து, திறம்பட வாதாடி வெற்றி கண்டனர். நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்னரே, பல ஆண்டுகளாக திராவிடர் நலம் பற்றி ஆய்ந்து ஆவன செய்த நடேசனாருக்கு திராவிடர் இயக்கம் என்றும் கடமைப்பட்டதாகும். ஆனால், பிற்காலத்தில் டாக்டர் நடேசனாருக்கோ, டாக்டர் நாயருக்கோ எந்த விழாவும் எடுக்கப்படவில்லை. அவர்கள் நினைவாக சிலைகூட வைக்கப்படவில்லை. உழைத்த உத்தமர்களை நாடு மறந்து விட்டது!
அவர் பல ஆண்டுக் காலம் நகர மன்றத்தில் உறுப்பினராக இருந்து ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மலிந்துவிட்ட சுகாதாரக் கேடுகளை அகற்றினார். அவர் பலமுறை போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை 1924-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேடித் தேடி பி. கந்தசாமி செட்டியார் என்பவரை நிறுத்தினர். வீண் முயற்சி வேண்டாம் என்று திரு.வி.க. காங்கிரசு மேலிடத்திற்கு, குறிப்பாக சீனிவாச அய்யங்காருக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்தத் தேர்தல் முடிவு சீனிவாச அய்யங்காரையே திகைப்படையச் செய்து விட்டது. பார்ப்பனர்கள் கூட பெருமளவு டாக்டர் நடேசனாருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
1920-இல் சென்னை சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் கூட டாக்டர் நடேசனாரே எல்லோரையும் விட அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காகக் காங்கிரசு தலைவர்கள் பாடுபட்டு ஓங்கி வளர்ந்திருந்த காலத்தில் டாக்டர் நடேசனார் மட்டும் எப்படிப் போட்டியின்றியும், அதிக வாக்குகள் பெற்றும் வெற்றி பெற முடிந்தது என்பதை நடுநிலையாளர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, 1921-ஆம் ஆண்டிலிருந்தே பார்ப்பனர் அல்லாதோருக்காக வகுப்பு நீதி கோரி சட்டமன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டு வந்து பேசும்போதெல்லாம் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தைக் கடுமையாகக் கண்டித்த டாக்டர் நடேசனார் எப்படிப் பெருவாரியான வெற்றியும், பார்ப்பனர்களின் ஆதரவையும் கூட பெற முடிந்தது என்று கண்டறிந்தால், அவருடைய தனிப்பட்ட குணநலன்கள் பற்றி தெளிவாகக் கண்டறிய முடியும்.
அவரிடம் உதவி கேட்டு யார் வந்தாலும் எல்லாருக்கும் இயன்ற உதவியைச் செய்து வந்தார். திரு.வி.க. காங்கிரசு இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தும், நீதிக்கட்சியைக் கடுமையாக எதிர்த்து வேலை செய்து வந்த காலக் கட்டத்தில்கூட அவருக்குப் பலமுறை டாக்டர் நடேசனார் உதவி புரிந்திருக்கிறார் என்பதை திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் படித்து அறிகிறோம். உதவி புரிவதில் அவர் குறுகிய கண்ணோட்டம் செலுத்தியதில்லை. அவர் அந்தக் காலத்தில் சிறந்த பரோபகாரியாக - நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவராக - பிறர் நலனுக்காகவே, குறிப்பாக முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், முதியோர்கள், பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் ஆக எல்லாருக்கும் தெய்வமாக விளங்கினார். தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள், வேண்டியவர்கள் - வேண்டாதவர்கள் என்ற பாகுபாட்டிற்கே அவர் இடம் கொடுக்கவில்லை.
அதனால்தான் அவரை மக்கள், தலைவராக மதித்தனர் என்பதை அறியலாம். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் அவரால் நீதிக்கட்சி பயன் பெற்றதே தவிர, நீதிக்கட்சியால் அவர் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை.
அவர் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர். தோல்வியைப் பற்றியோ, ஏமாற்றம் பற்றியோ அவர் எதிலும் நம்பிக்கை இழத்தல் கூடாது என்பது அவரின் கோட்பாடு.
அவரைப் பற்றி பிறர் கூறியுள்ள சில கருத்துகளை ஆராயும்போது, நாம் எப்படிப்பட்ட தலைவரை பெற்றிருந்தோம் என்ற உண்மையை அறிய முடிகிறது.
உலகில் பிறந்த மக்கள் யாவரும் கடவுளின் புதல்வர்களே, மக்கள் யாவரும் ஏற்றத் தாழ்வற்றவரும், சமமானவருமாவர் என்ற பரந்த கொள்கையை உடைய வராயிருந்தார் என்று சுரேந்திரநாத் ஆர்யா டாக்டர் நடேசனாருக்கு புகழாரம் சூட்டியிருப்பதில் இருந்து நாம் எப்படிப்பட்ட தலைவரை நமது இயக்கத்திற்குப் பிதாவாகப் பெற்றிருந்தோம் என்பது தெளிவுபடுகிறது.
மனித சமுதாயத்திலேயே புறக்கணிக்கப்பட்டும், கவனிக்கப்படாமலும், வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களுக்குத் தொண்டு புரிவதையே தம் பிறவிப் பயனாகக் கொண்டிருந்தார் என்று சர். எம்.கிருஷ்ணன் நாயர் குறிப்பிட்டிருப்பதிலிருந்து தாழ்ந்த திராவிடத்தைத் தட்டி எழுப்பிடும் ஆற்றல் மிக்கவரை நாம் பெற்றது புலப்படும்.
தரித்திரமும், ஏழ்மையும் உருக்கொண்டு அல்லல்படும் ஒரு மனித சமுதாயத்தினருக்காகவே நடேச முதலியார் வாழ்ந்தார் என்று சர். முகமது உஸ்மான் கூறியிருப்பதிலிருந்து நம்மால் டாக்டர் நடேசனாரின் இலட்சிய வாழ்க்கையைப் பற்றி அறிய முடிகிறது.
சாதி, மத வேறுபாடுகளை கடந்து அன்பு என்னும் ஒளியானது தன்னைச் சுற்றி சுடர்விட்டுப் பிரகாசிக்கும்படி செய்தவராவார் என்று திரு. சர்.சின்னசாமி அய்யங்கார் குறிப்பிட்டிருப்பதிலிருந்து ஆழமான கருத்தை நாம் அறிய முடிகிறது.
காந்தியை மகாத்மா, அவதார புருடர் என்றெல்லாம் மக்கள் பேசுவது போல், நடேசனாரையும் ஒரு மகாத்மாவாக மக்கள் மதித்துப் பேசினர்.
நடேசனாரைப் போல் பிராமணரல்லாதாரின் மனதைப் பெருமளவு கவர்ந்தவரும், பிராமணர்களின் வெறுப்பைச் சிறிதளவே தேடிக் கொண்டவரும் - ஜஸ்டிஸ் கட்சியில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள் என்று திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் தென்னாட்டு பிரமுகர்கள் என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை காணும் போது திராவிடர்களுக்கு வாய்த்த உண்மையான மகாத்மா டாக்டர் நடேசனார் தான் என்பது அய்யமின்றித் தெளிவாக விளங்குகிறது.
நீதிக்கட்சியின் தூணாக விளங்கிய டாக்டர் டி.எம். நாயர், 1918-ஆம் ஆண்டு இலண்டன் சென்று திராவிட மக்களின் நிலையை உணர்த்தி, சட்டமன்றத் தேர்தலில் இடஒதுக்கீடு பார்ப்பனர் அல்லாதாருக்கு வேண்டும் என்று வலியுறுத்தச் சென்றபோது, நான் திரும்பி வரும் வரையில், ஜஸ்டிஸ் கட்சியை உங்களிடம் ஒப்படைத்து செல்கிறேன். நீங்கள்தான் கட்சியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நடேசனாரை கேட்டுக் கொண்டார் என்ற செய்தி கட்சியின் நாளேடு ஜஸ்டிஸ் ஏட்டில் காணப்படுகிறது. இதிலிருந்து டாக்டர் நடேசனார் எந்த அளவிற்கு அறிவாற்றல் மிக்கவராகக் கட்சியைப் பாதுகாத்திடும் ஆற்றல் மிக்கவராக இருந்திருக்கிறார் என்பது புலப்படும். கட்சி வாழ்கிறது என்றால், திராவிடர் வாழ்கிறார்கள் - கட்சி வீழ்ந்துவிட்டால் திராவிடம் அழிந்து விடும் என்பதை மக்களுக்கு உணர்த்தியவர் அவர்.
நீதிக்கட்சியின் தலைவர்கள் சிலர் இவருடைய செல்வாக்கைக் கண்டு, அவரைப் புறக்கணிக்கும் காலக் கட்டமும் பிறந்தது. அவருக்கு அமைச்சர் அவையில் எந்தப் பதவியும் தரப்படவில்லை. மாநகராட்சியில் அவர் ஒரு முறை கூட நகரத் தந்தையாக வர முடியவில்லை.
அந்த நிலையில்கூட அவர் கட்சியிடம் கொண்டிருந்த உண்மையான பற்றைக் குறைத்துக் கொள்ளவில்லை. எதையும் தாங்கும் இதயத்துடன் கட்சியின் மேம்பாட்டிற்காக எப்போதும் போல உழைத்தார். ஒருமுறை அவர் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடினார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து அரசின் தவறுகளைத் துணிவுடன் சுட்டிக் காட்டினார். மக்களுக்கு மட்டும் மருத்துவராக இருக்கவில்லை. கட்சிக்கும் அவர் மருத்துவராக இருந்தார். ஒரு சமயம் சட்டமன்றத்தில் சுயராஜ்யா கட்சியினர் இவரைப் பார்த்து நீங்கள்தான் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து விட்டீர்களே! என்று கேலி பேசியபோது, ஆம்! நான் எதிர்க்கட்சியின் வரிசையில்தான் வந்து விட்டேன். ஆனால், என் கட்சியின் கொள்கையை விட்டுவிட்டு எதிர்க் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று பதிலளித்தார்.
நீதிக்கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்ட 1927-ஆம் ஆண்டு விருப்பமுள்ள ஜஸ்டிஸ் கட்சியினர் காங்கிரசு பேரியக்கத்தில் சேரலாம் என்று கோவையில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவி வெறியர்கள் இப்படித் தீர்மானத்தை முன்மொழிந்த போது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர் இருவர். நடேசனார் ஒருவர்; சர். கே.வி. ரெட்டி மற்றொருவர். வேல் பாய்ச்சப்பட்ட இதயத்துடன் தொடர்ந்து நீதிக்கட்சியிலேயே இருந்து தொண்டாற்றி, தனக்கென ஒரு குழுவை உண்டாக்கிக் கொண்டவர் டாக்டர் நடேசனார்.
1926-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை பெறவில்லை. உதிரிகளைச் சேர்த்துக் கொண்டு அமைச்சர் அவை அமைக்கவும் பனகல் அரசர் விரும்பவில்லை. இருப்பினும் எதிரிகள் வியப்படையும் வண்ணம் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற, டாக்டர் சுப்பராயனுக்கு நீதிக்கட்சி ஆதரவு அளித்தது. அதுமட்டுமல்ல, ஆட்சி உறுதியுடன் நிலையாகச் செயல்பட டாக்டர் நடேசனார், சுப்பராயன் அமைச்சர் அவையில் ஒரு பார்ப்பனருக்கு இடம் தரவேண்டும் என்று கூறிய யோசனையை சுப்பராயன் ஏற்றார். பார்ப்பனர்கள் கொட்டம் அடங்கியது. பனகல் அரசரின் இராஜதந்திரத்தையும், நடேசனாரின் இராஜ தந்திரத்தையும் நாம் வியந்து பாராட்டுதல் வேண்டும்.
நகரசபையில்...
டாக்டர் நடேசனார் பதவி வெறி பிடித்தவர் அல்லர். அவரைப் போல மக்களுக்கு இரவு பகலும் தொண்டாற்றியவர், வேறு யாரும் இல்லை. அவர் புரிந்தது பயன் கருதாத பணி. தன் செல்வத்தை ஏழைகளுக்காகவே செலவழித்தார். மக்கள் எல்லோரும் அவரிடம் கொண்டிருந்த அன்பின் விளைவாகத் தான் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. நாட்டில் காங்கிரசு பெற்றிருந்த செல்வாக்கு அவரைப் பொறுத்தவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. திரு.வி.க. போன்ற பழுத்த காங்கிரஸ் தலைவர்களே இந்த உண்மையை உணர்ந்து வெளிப்படையாகக் கூறியிருக்கின்றனர்.
நகரசபையில் அவர் பல சாதனைகளைச் செய்து காட்டினார். அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர் நல்லது செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் பாடுபட்டார்.
நகரசுத்தித் தொழிலாளர் நாள்தோறும் சேகரிக்கும் குப்பைக் கூளங்களை ஒதுக்குப்புறப் பகுதிகளில், அதுவும் தாழ்த்தப்பட்டவர் வாழும் இடங்களில் கொட்ட வேண்டும் என்று சபை முடிவு செய்தபோது, அந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசினார். சுகாதார வசதியற்று, பிணியால் அவதியுறும் மக்களை மேலும் வதை செய்வது இரக்கமற்ற செயல் என்று வாதாடினார். நகரசபை பணிந்து முடிவைக் கைவிட்டது.
நகரசபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்று, விவாதங்களில் கலந்து கொண்டு மக்களின் மேன்மைக்காகவே நாள்தோறும் பாடுபட்டார். அவருடன் நகர சபையில் இருந்த நீதிக்கட்சித் தலைவர்கள், குறிப்பாக டாக்டர் நாயர், சர். தியாகராயர், ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் நிருவாகத் திறமை மிக்கவர்கள் இருந்தும், நடேச முதலியார் நகரசபையின் தலைவராக ஒருமுறை கூட வரமுடியவில்லை. அந்த அளவிற்கு நீதிக்கட்சித் தலைவர்கள் தரக் குறைவாக நடந்து கொண்டனர். நீதிக்கட்சியிலேயே அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது.
டாக்டர் நடேசனார் சென்னை சுகாதார நிறுவனத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தார். சென்னை சுகாதாரப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராக, 1927 முதல் 1937 வரை பணியாற்றினார். இந்த நிறுவனத்தின் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்தார்.
அவர் சுகாதாரம், மருத்துவத்துறையில் பெற்றிருந்த ஆற்றலின் காரணமாக, 1927-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூட்டப்பட்ட கீழ்திசை மருத்துவர் மாநாட்டிற்கு (குயச நுயளவநச ஊடிபேசநளள டிக ஆநனஉயட ஆந) பிரதிநிதியாக சென்னை நகரசபை அனுப்பி வைத்தது. அவருடைய புத்திக் கூர்மையும், மருத்துவ அறிவையும் கண்டு அனைத்துப் பிரதிநிதிகளும் வியந்தனர் என்று 24.8.1938-இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்ற படத் திறப்பு விழாவில் காங்கிரசு அமைச்சர் டாக்டர் டி.எஸ்.எஸ். இராஜன் பேசியிருப்பதில் இருந்து மாற்றாரின் மனதை அவர் எந்த அளவிற்குக் கவர்ந்துவிட்டவர் என்பது புலப்படும்.
அவர் மறைவிற்குப் பிறகு அவர் நினைவாகச் சிலை ஒன்று வைக்க வேண்டும் என்று பல தலைவர்கள் பேசினர். நகரசபைக்கு வேண்டுகோள் விடுத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், இதிலும் அவருக்கு மதிப்பும், மரியாதையும் தரப்படவில்லை. ஆம், இந்த நாள் வரை!
உண்மையாகத் தொண்டாற்றுபவர்களுக்கு, நீதி, நேர்மையுடன் கடமையைச் செய்பவர்களுக்கு, தன்நலம் கருதாது, எப்போதும் ஊருக்கு உழைப்பவர்களுக்கு, நம் சமுதாயத்தில் இப்படி ஒரு நிலை நீடிப்பதும், நன்றியை மறப்பதும், ஒருவர் இறந்துவிட்ட பிறகும் கூட உட்பகையும், பொறாமையும் கொண்டு செயல்படுவதும் நமக்குச் சாதாரணமாகி விட்டது. திராவிடர் இயக்கத்தின் சிற்பிகளான டாக்டர் டி.எம். நாயருக்கோ, டாக்டர் நடேசனாருக்கோ நினைவுச் சின்னம் எழுப்பப்படாதிருப்பது நமது வரலாற்றில் பெரிய குறையாகவே நீடிக்கிறது.
நூல் - திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார்
ஆசிரியர் - ஏ.எஸ்.வேணு
Comments
Post a Comment